நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தும்பாட் மோதல் விவகாரம்: வதந்திகளுக்கு காவல்துறை முற்றுப்புள்ளி

தும்பாட்:

கடந்த மார்ச் 31-ஆம் தேதி, வாக்காப் பாரு, கம்போங் குட்டான் பகுதியில் ஆடவர் ஒருவர் கும்பலாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தும்பாட் மாவட்ட போலிஸ் துணை தலைமை ஆணையர் முஹம்மத் கைரி ஷஃபி திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக 18 முதல் 67 வயதுக்குட்பட்ட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த மோதலானது இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உருவானது என்றும், இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக 36 வயதுடைய ஆடவர் ஒருவர் மீது வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தும்பாட் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டப்பிரிவு 334-இன் கீழ் அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்படவுள்ளது.

முன்னதாக, தனது மனைவியை அழைத்துச் செல்ல மாமனார் வீட்டிற்குச் சென்ற 33 வயது ஆடவர் தாக்கப்பட்டதாகவும், இது குறித்துப் புகார் அளித்தும் போலிசார் நடவடிக்கை எடுக்காமல் புகாரைத் திரும்பப் பெற வற்புறுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. 

ஆனால், இப்புகாரில் உண்மையில்லை என்றும், இந்த வழக்கு மிகவும் வெளிப்படையான முறையில், தொழில்முறை நேர்த்தியுடன் கையாளப்பட்டு வருவதாகவும் காவல்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் அதிகாரப்பூர்வமற்ற அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று முஹம்மத் கைரி ஷஃபி அறிவுறுத்தியுள்ளார். 

அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset