நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசின் அதிரடி திட்டம்: 2 லட்சம் நெல் விவசாயிகள் பயன்பெறுவர்

கோலாலம்பூர்: 

விவசாயிகளுக்கான சாகுபடி ஊக்கத்தொகை, டீசல் மானியத்தை உயர்த்துவதற்கான அரசின் நடவடிக்கை, நாட்டின் உணவு உற்பத்தித் துறையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என விவசாய, உணவுப் பாதுகாப்பு அமைச்சு (KPKM) தெரிவித்துள்ளது. 

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் அதிகரித்துள்ள உற்பத்திச் செலவினங்களைக் கருத்தில் கொண்டு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பு மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என அமைச்சு பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி, நெல் விவசாயிகளுக்கான சாகுபடி ஊக்கத்தொகை (IPKP) ஒரு ஹெக்டேருக்கு RM160 ரிங்கிட்டிலிருந்து RM300 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதற்காக அரசாங்கம் கூடுதலாக RM40 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதன் மூலம், சுமார் 2 லட்சம் நெல் விவசாயிகள் நேரடியாகப் பலன் அடைவார்கள். மேலும், ‘பூடி' (BUDI) வேளாண், டீசல் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவி RM300 ரிங்கிட்டிலிருந்து RM400 ரிங்கிட்டாக இந்த மாதம் முதல் உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தீபகற்ப மலேசியாவில் உள்ள சுமார் 2 லட்சம் சிறு விவசாயிகளும், 1.5 லட்சம் டீசல் வாகன உரிமையாளர்களும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எரிபொருள் விலை உயர்வினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கவும், நாட்டின் உணவுப் பாதுகாப்புச் சங்கிலி தடையின்றித் தொடரவும் இந்த உதவி பெரிதும் துணைபுரியும்.

விவசாய இயந்திரங்களுக்கான டீசல் கொள்முதல் நடைமுறைகளை அரசாங்கம் எளிமைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தேவையற்ற நிர்வாகச் சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு, விவசாயிகள் தங்களது பணிகளைத் தடையின்றிச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சலுகைகள் தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்ய, பிற அமைச்சுக்களுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக விவசாய அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset