நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: வரவு செலவுத் திட்டத்தில் மாற்றம் செய்ய பேராக் அரசு தயார்

ஈப்போ: 

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்து, மாநிலப் பொருளாதாரம், மக்களின் நலனைப் பாதிக்கும் பட்சத்தில், தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப் பேராக் மாநில அரசு பரிசீலித்து வருகிறது. 

தற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, அரசு மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக முதல் அமைச்சர் டத்தோஸ்ரீ சாரணி முஹம்மத் தெரிவித்தார். 

கட்டுமானச் செலவுகள் அதிகரிப்பால் செயல்படுத்த முடியாத திட்டங்களுக்கான நிதியை, மக்கள் நலன் சார்ந்த மற்ற அவசியமான தேவைகளுக்குப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

நிலைமை மிகவும் இக்கட்டானதாக மாறினால் மட்டுமே கூடுதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யச் சிறப்புச் சட்டமன்றக் கூட்டம் கூட்டப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய எரிசக்தி நெருக்கடி இன்னும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

தற்போது சந்தைகள், வணிகங்கள் தடையின்றி இயங்கி வருவதால், மக்கள் தங்களது வாழ்வாதாரப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடிகிறது. இருப்பினும், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதே அரசின் முதன்மை நோக்கம் என்றும் அவர் கூறினார்.

'பேராக் செஜாத்ரா 2030' (Perak Sejahtera 2030) திட்டத்தின் கீழ், மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், இறக்குமதியைக் குறைப்பதிலும் பேராக் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 

மாநிலத்திற்கான அந்நிய முதலீடுகள் தற்போதும் நிலையாக இருப்பதாகவும், எந்தவொரு முக்கியத் திட்டங்களும் ரத்து செய்யப்படவில்லை என்றும் பேராக் முதல் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

ஆசிய பிராந்தியத்தில் நிலையான முதலீட்டு இடமாக மலேசியா விளங்குவதால், விநியோகச் சங்கிலி மாற்றங்கள் மூலம் பேராக் மாநிலம் கூடுதல் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset