நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சிலாங்கூர்:

சிலாங்கூர் மாநிலத்தின் காப்பார், புஞ்சாக் ஆலம் பகுதிகளில் நடந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், ஆபத்தில் சிக்கிய குழந்தைகளைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். 

முதல் சம்பவத்தில், காப்பார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏழு மாதக் குழந்தையொன்றின் கட்டைவிரல் அதன் நடைவண்டியில் (Baby Walker) சிக்கிக்கொண்டது. 

தகவலறிந்து மதியம் 12.41 மணியளவில் அங்கு சென்ற கோலா சிலாங்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அந்தப் பிஞ்சு விரலை எவ்வித காயமுமின்றி மீட்டனர்.

மற்றொரு சம்பவத்தில், புஞ்சாக் ஆலமில் உள்ள பாலர் பள்ளி ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினுள் ஒரு வயது சிறுவன் தவறுதலாகப் பூட்டிக்கொண்டான். 

மதியம் 1.07 மணியளவில் சுங்கை பூலோ தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐந்து வீரர்கள் கொண்ட குழுவினர், காரின் கதவைச் சமர்த்தாகத் திறந்து உள்ளே இருந்த சிறுவனைப் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.

இந்த இரண்டு மீட்புப் பணிகளிலும் குழந்தைகள் காயமின்றி மீட்கப்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் உறுதிப்படுத்தினார். 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இச்சம்பவங்களைத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset