நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவியைக் காலால் உதைத்துத் தள்ளிய மாணவன்: பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்குக் கேள்விக்குறி 

ஜொகூர் பாரு: 

 இடைநிலைப் பள்ளி மாணவி ஒருவர், மற்றொரு மாணவரால் உதைக்கப்பட்டு, தள்ளப்பட்டதில், அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூருல் என்று அழைக்கப்படும் 17 வயதுடைய அந்த மாணவி, கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி மதியம், தனது நண்பருடன் பள்ளி மைதானத்தில் நடந்து கொண்டிருந்த போது, தனக்கு அறிமுகமில்லாத ஒரு ஆண் மாணவர் தன்னை அணுகியதாகவும், அப்போதுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறினார்.

ஏதோ ஒன்றைக் கேட்ட பின்னர், அந்த ஆண் மாணவர் அவரைப் பின்புறமாக உதைத்தார். இதனால் அவர் கீழே விழுந்து அவரது தலை கட்டையில் மோதியது.

"இதன் விளைவாக, என் முழங்கால் காயமடைந்தது. நான் மீண்டும் எழுந்தபோது, அந்த ஆண் மீண்டும் என்னை உதைத்தார். பின்னர், அவர் என் இடுப்பைப் பிடித்து, நான் விழும் வரை என்னைத் தள்ளினார்.

"நான் மயக்கமடைந்தேன். பின்னர், பள்ளியின் முதலுதவி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். 

"வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டபோது, பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு மேம்பாலத்தில் நான் கிட்டத்தட்ட மயங்கி விழுந்தேன். அதற்கு முன், என் நண்பர் என்னை மேம்பாலத்திற்கு முன்னால் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர், என் தந்தையைத் தொடர்பு கொண்டார்" என்று அவர் கூறினார். 

பின்னர், பாதிக்கப்பட்டவர் அவரது தந்தையால் பரிசோதனைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கடந்த நான்கு நாட்களாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனது கழுத்தின் பின்புறத்தில் வலியை அனுபவிப்பதாகவும் இதனால், அவரால் வழக்கம் போல் உட்காரவோ, நிற்கவோ அல்லது நடக்கவோ முடியவில்லை என்று நூருல் கூறினார். 

"கழுத்து பகுதியில் எனக்கு தசைநார் கிழிந்துள்ளதாக மருத்துவர் கூறினார், இருப்பினும், எலும்பு முறிவு எதுவும் இல்லை.

"நான் இன்னும் வலியை அனுபவித்து வருகிறேன். மேலும், இது நீண்ட காலத்திற்கு எனது ஆரோக்கியத்தில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துமோ என்று நான் கவலைப்படுகிறேன்" என்றார் அவர்.

அந்த மாணவியின் 41 வயதுடைய தந்தை, இந்தச் சம்பவத்தில் வருத்தம் இருப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும், பள்ளி நிர்வாகம் அல்லது மாநில கல்வித் துறையினர் பொருத்தமான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் தந்தை, கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தாமான் உங்கு துன் அமினா போலிஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில், ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர், இச்சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset