நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடலில் குதித்து தப்பிய கும்பல்: RM10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

கோத்தா திங்கி: 

ஜொகூர், தஞ்சோங் செடிலி கடல் மண்டலத்திற்கு உட்பட்ட பத்து லாயார் கடற்கரை அருகே, சுமார் RM10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்தும் முயற்சியை மலேசிய கடல்சார் அமலாக்க மேம்பாட்டு முகமை முறியடித்துள்ளது. 

கடந்த புதன்கிழமை இரவு சுமார் 9.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனையில் 20 கிலோகிராம் 'ஷாபு' (Syabu) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான முறையில் அண்டை நாடு நோக்கிச் சென்ற பதிவு எண் இல்லாத படகு ஒன்றை மறிக்க முயன்றனர். 

அதிகாரிகளைக் கண்டதும் தப்பிக்கும் நோக்கில் அந்தப் படகு மீண்டும் மலேசிய கடல் எல்லைக்குள் திரும்பியது. சுமார் 10 நிமிடத் துரத்தலுக்குப் பிறகு, கரையில் இருந்து 700 மீட்டர் தொலைவில் இருந்தபோதே படகில் இருந்த இருவர் கடலில் குதித்துத் தப்பி ஓடினர்.

அந்தப் படகைச் சோதனையிட்டபோது, அதில் 20 மஞ்சள் நிறப் பொட்டலங்களைக் கொண்ட ஒரு பை கண்டெடுக்கப்பட்டது. இந்தப் போதைப்பொருட்கள் மலேசியாவிலிருந்து அண்டை நாட்டிற்கு கடத்தப்படவிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தப் படகின் இயந்திரத் திறன் குறைவாக இருப்பதால், நடுக்கடலில் மற்றொரு பெரிய படகு இவர்களுக்காகக் காத்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மேலாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. தப்பியோடிய இருவரையும் அடையாளம் காணும் பொருட்டு, படகில் உள்ள விரல் ரேகைகளைத் தடயவியல் நிபுணர்கள் சேகரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset