நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து: பன்றிப் பண்ணைக் கழிவுகளால் சிலாங்கூர் ஆறுகள் மாசு

கோலாலம்பூர்: 

மலேசியாவின் மிக முன்னேறிய மாநிலமான சிலாங்கூரில், முறையற்ற முறையில் இயங்கும் பன்றிப் பண்ணைகள் ஆற்று நீர் நிலைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். 

போதிய கழிவு மேலாண்மை இன்றி, பண்ணைக் கழிவுகள் நேரடியாக ஆறுகளில் கலப்பதால் நீரின் தரம் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

மலேசியாவின் குடிநீர் தேவையில் 81 விழுக்காடு ஆறுகளையே நம்பியிருக்கும் வேளையில், இத்தகைய பண்ணைக் கழிவுகள் ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து நீர்வாழ் உயிரினங்களை அழிப்பதாக நீர், எரிசக்தி ஆய்வுச் சங்கத்தின் தலைவர் எஸ். பியாரபாகரன் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, புக்கிட் தகார் பகுதியில் அமையவிருந்த பண்ணைத் திட்டம், சிலாங்கூர் ஆற்றின் தூய்மையைக் கருத்தில் கொண்டு அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இது குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா அவர்களும் தனது அதிருப்தியை ஏற்கனவே பதிவு செய்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப், கடந்த 2020 முதல் 2024 வரையிலான ஆய்வுகளின்படி, பண்ணைக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு தொடர்ந்து சீராக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். 

அதேவேளையில், பண்ணைக் கழிவுகள் மட்டுமன்றி தொழிற்சாலைக் கழிவுகள், பிளாஸ்டிக், ரசாயனக் கழிவுகளும் ஆறுகளைப் பெரிதும் மாசுபடுத்துவதாகச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆறுகளைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள், நவீன கண்காணிப்பு முறைகள், தவறு செய்யும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முறையான அமலாக்கம் இல்லையெனில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான நீர் விநியோகத் தட்டுப்பாடு போன்ற சூழல் மீண்டும் உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset