நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுற்றுலாப் பயணிகளுக்கான நிபந்தனைகளில் தோல்வி: புக்கிட் காயு ஹித்தாம் எல்லையில் 28 பேருக்கு அனுமதி மறுப்பு

புக்கிட் காயு ஹித்தாம்:

மலேசியாவின் எல்லைப் பாதுகாப்பு முகமை, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நேற்று வரை புக்கிட் காயு ஹித்தாம் எல்லைச் சாவடி வழியாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 28 வெளிநாட்டினரின் வருகையை நிராகரித்துள்ளது.

குடிவரவுத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 14 பேரும், தாய்லாந்து, வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். 

முறையான திரும்பும் பயணச் சீட்டு இல்லாதது, பயணத்திற்கான சரியான காரணத்தைக் கூறத் தவறியது, குடிவரவுத் துறையின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது போன்ற காரணங்களால் இவர்களது நுழைவு மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாஸ்போர்ட் சேதமடைந்திருந்த ஐந்து தாய்லாந்து நாட்டினரும், தரைவழிப் பாதையைப் பயன்படுத்த அனுமதி இல்லாத இரண்டு வங்கதேச நாட்டினரும் எல்லையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். 

சட்டத்திற்குப் புறம்பாகவோ அல்லது விதிகளை மீறியோ எவரும் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க எல்லைக் கட்டுப்பாடு தொடர்ந்து பலப்படுத்தப்படும் என எல்லைப் பாதுகாப்புப் படைத் தளபதி மூத்த உதவி ஆணையர் பெளசி முஹம்மத் யூசோப் தெரிவித்துள்ளார்.

நாட்டின் குடிவரவு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்த முயலும் எவருக்கும் எதிராகத் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும், தகுதியான பயணிகள் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset