நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காடுகளில் சட்டவிரோதத் தீ மூட்டல்; நில உரிமையாளருக்கு எதிராகச் சுற்றுச்சூழல் கடும் எச்சரிக்கை

மலாக்கா: 

மலாக்கா, தங்கா பத்து பகுதியில் உள்ள புதர் மண்டிய காடுகளில், மரக்கட்டைகளைக் குவித்து வைத்துச் சட்டவிரோதமாகத் தீ மூட்டிய நபர்களுக்கு எதிராக மாநிலச் சுற்றுச்சூழல் துறை (JAS) கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் இக்குற்றச்சாட்டினை உறுதிப்படுத்தினர்.

அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், நிலத்தைச் சுத்தம் செய்வதற்காக வெட்டப்பட்ட பெரிய அளவிலான மரக்கட்டைகள் அடுக்கப்பட்டுத் தீ மூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. 

அதிகாரிகள் அங்கு சென்றபோது, அந்த மரக்கட்டைகள் அணையாமல் புகைந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இச்செயல் அப்பகுதியின் காற்றுத் தூய்மையைப் பாதிப்பதோடு, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, 1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட நில உரிமையாளருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

மேலும், இது போன்ற விதிமீறல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கச் சுற்றுச்சூழல் துறை அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது எனச் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. 

மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இது போன்ற சட்டவிரோதத் தீ மூட்டல் அல்லது சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கண்டால், உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset