நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாயில் பரபரப்பு: 24 மணிநேரத்திற்குள் அரங்கேறிய இரண்டு வழிப்பறி சம்பவங்கள்

நீலாய்: 

நீலாய் வட்டாரத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஆயுதம் தாங்கிய கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், கத்தி, அரிவாளைக் காட்டி மிரட்டி பொதுமக்களின் பணத்தையும் உடைமைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் சம்பவம், அதிகாலை 1.10 மணியளவில் பண்டார் பாரு நீலாயில் உள்ள 24 மணிநேர பல்பொருள் அங்கடியில் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், அங்கிருந்த ஊழியரை கத்தியால் மிரட்டி சுமார் RM600 ரிங்கிட் பணத்தையும், பல சிகரெட் பெட்டிகளைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இரண்டாவது சம்பவம், இரவு 9.48 மணியளவில் நீலாய் மக்கள் குடியிருப்பில் (Rumah Rakyat Nilai) நிகழ்ந்தது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று மர்ம நபர்கள், 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவரை அரிவாளால் மிரட்டி அவரிடமிருந்த பணம், வங்கி அட்டைகள், நகைகளைப் பறித்துச் சென்றனர். இச்சம்பவத்தின் போது தனது உடைமைகளைப் பாதுகாக்கப் போராடிய அந்தப் பெண்மணிக்கு விரலில் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த இரு சம்பவங்களிலும் ஒட்டுமொத்தமாக RM2,000 வெள்ளிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்துத் தகவல் தெரிவித்த நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜோஹரி யாஹ்யா, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset