நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூச்சிங்கில் பராமரிப்பின்றி தவித்த 8 சிறுவர்கள் மீட்பு: சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர்

கூச்சிங்: 

கூச்சிங், பத்து 13 பகுதியில் எவ்வித பராமரிப்புமின்றி மிகவும் மோசமான நிலையில் வீட்டில் தங்கியிருந்த 8 சிறுவர்கள் மீட்கப்பட்டு, தற்போது மேலதிக பரிசோதனைகளுக்காகச் சரவாக் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அச்சிறுவர்களின் பெற்றோருக்குத் காசநோய் (TB) பாதிப்பு இருப்பதால், சிறுவர்களுக்கும் அந்தப் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியவும், நோய் பரவலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார். 

மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து ஏப்ரல் இறுதிக்குள் அவர்கள் விடுவிக்கப்பட்டவுடன், நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் காப்பகங்களில் ஒப்படைக்கப்படுவார்கள்.

மீட்கப்பட்டவர்களில் 15, 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஸ்ரீ அமானில் உள்ள டத்தோ அஜிபா அபோல் சிறுவர் இல்லத்திலும், 10 வயதிற்குட்பட்ட ஐந்து சிறுவர்கள், மூன்று மாதக் குழந்தை ஆகியோர் கூச்சிங்கில் உள்ள தோ புவான் ஹாஜா நோர்கியா சிறுவர் இல்லத்திலும் தங்கவைக்கப்பட உள்ளனர். 

மேலும், இந்தச் சிறுவர்களில் இருவருக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், அவர்களுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுத் தரும் பணிகளைச் சமூக நலத் துறை (JKM) மேற்கொண்டு வருகிறது.

சிறுவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெரியவர்களும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும், அவர்கள் தங்குவதற்கு மலிவு விலை வாடகை வீடுகள் ஏற்பாடு செய்யப்படும் வரை கூச்சிங்கில் உள்ள 'அஞ்சுங் சிங்காவில்' தற்காலிகமாகத் தங்கவைக்கப்படுவார்கள். 

குடும்பத்தினர் நிரந்தரமான ஒரு முகவரிக்குக் குடிபெயர்ந்த பிறகு, அவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்குவது குறித்துச் சமூக நலத் துறை பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் நான்சி சுக்ரி உறுதிபடத் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset