நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிரம்பானில் பரபரப்பு: வங்காளதேச நண்பரைக் கடத்தி 20,000 ரிங்கிட் மீட்புத் தொகை கேட்ட மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்

சிரம்பான்: 

தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒருவரையே கடத்தி RM20,000 ரிங்கிட் மீட்புத் தொகை கேட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று வங்காளதேச ஆடவர்கள், இன்று சிரம்பான் அமர்வு நீதிமன்றத்தில் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர். 

காசி மியோஸ்டோபா (38), மருஃப் ஹொசைன் (28), ஆலிம் அப்துல் (30) ஆகிய அந்த மூவர் மீதும் நீதிபதி என்.கனகேஸ்வரி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. கடந்த மார்ச் 22-ஆம் தேதி, மதியம் 1 மணியளவில் சிரம்பான், ஜாலான் டத்தோ ஷேக் அஹ்மத் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு முன்னால் ரோனி ஹவ்லாடர் என்பவரைக் கடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் இருவருடன் இணைந்து, பாதிக்கப்பட்டவரை விடுவிக்க RM20,000 ரிங்கிட் பணத்தைக் கோரியதாகத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்குக் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் திருமணமானவர்கள் என்றும், அவர்களின் குடும்பத்தினர் தங்களைச் சார்ந்து வாழ்பவர்கள் என்றும் கூறி அவர்களது வழக்கறிஞர் பிணை கோரினார். 

ஆனால், அவர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், அவர்களுக்குப் பிணை வழங்க மறுத்துவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, வழக்குக் குறிப்புகளைச் சமர்ப்பிப்பதற்காக வரும் மே மாதம் 7-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset