நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரெங்கானுவில் பரபரப்பு: வெப்பத்தைத் தாளாமல் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்த நாகப்பாம்புகள்

கோலா திரெங்கானு: 

மலேசியாவில் நிலவி வரும் கடும் வெப்பம், வறண்ட காலநிலையைத் தொடர்ந்து, கோலா திரெங்கானு மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 632 பாம்புகள் பிடிப்பட்டுள்ளதாக மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 556 பாம்புகள் மட்டுமே பிடிப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடும் வெயில் காரணமாகத் தட்பவெப்ப நிலை மாறுபடுவதால், பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி குடியிருப்புகளுக்குள் நுழைவதே இந்த அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

பாம்புகளின் இயற்கையான வாழ்விடங்கள் அழிக்கப்படுவதும், அவை மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் தஞ்சம் புகுவதற்கு மற்றொரு காரணியாக அமைகிறது. 

பிடிப்பட்ட பாம்புகளில் ராஜ நாகம், சாதாரண நாகப்பாம்பு, மலைப்பாம்புகள் ஆகியவை அதிகளவில் அடங்கும். இவை பெரும்பாலும் வீடுகள், கட்டுமானத் தளங்கள், வடிகால்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மக்கள் வசிக்கும் இடங்களைச் சுற்றி இத்தகைய விஷப்பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய மாவட்ட அதிகாரி முஹம்மத் ஹனாபி ஹம்சா, பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

வீடுகளுக்குள் பாம்புகள் புகுவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், ஒருவேளை பாம்புகளைக் கண்டால் பொதுமக்கள் தாங்களாகவே அவற்றைப் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பாம்புகளைக் கண்டால் உடனடியாகக் குடிமைத் தற்காப்புப் படைக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு அவர் மேலும் வலியுறுத்தினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset