நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் பரபரப்பு: கொரியா நாட்டின் குற்றவாளியைச் சுற்றி வளைத்த மலேசியக் குடிவரவுத் துறை

ஜொகூர் பாரு: 

சொந்த நாட்டில் சுமார் 94 லட்சம் ரிங்கிட் (3.5 பில்லியன் கொரியா வொன்) மதிப்பிலான நிதி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த 49 வயது கொரியா நாட்டவர் ஒருவரை ஜொகூர் மாநில குடிவரவுத் துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். 

ஜொகூர் பாரு, ஹொரைசன் ஹில்ஸ் பகுதியில் உள்ள சொகுசு குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் பிடிபட்டார். மலேசியாவில் தங்குவதற்காக அவர் போலி வேலை வாய்ப்பு அனுமதியைப் பயன்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனையின் போது, அந்த நபருடன் அவரது சீன நாட்டு மனைவி, இரண்டு மகன்களும் அவ்வீட்டில் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது. மேலும், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 55 வயது பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவரும் குடிவரவுத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். 

சோதனையில் அந்த கொரியா நபர், பிலிப்பைன்ஸ் பெண் ஆகிய இருவரும் மலேசியாவில் தங்குவதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவ்விருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முறையான ஆவணங்கள் இன்றித் தங்கியிருக்கும் வெளிநாட்டினர், ஆவண மோசடியில் ஈடுபடும் ஏஜெண்டுகளுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜொகூர் மாநில குடிவரவுத் துறை இயக்குநர் டத்தோ முஹம்மத் ருஸ்டி முஹம்மத் டாருஸ் எச்சரித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset