நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈஜோக்கில் ரகசியமாகச் செயல்பட்ட தொழிற்சாலை மீது அதிரடி சோதனை: வங்காளதேச தொழிலாளர்கள் உட்பட 22 பேர் கைது

கோலா சிலாங்கூர்: 

ஈஜோக் பகுதியில் பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலை என்ற பெயரில் ரகசியமாகச் செயல்பட்டு வந்த மின்னணு கழிவு (e-waste) சுத்திகரிப்பு தொழிற்சாலை ஒன்றை குடிவரவுத் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை இட்டனர். 

ஒரு மாத கால ரகசியக் கண்காணிப்பிற்குப் பிறகு நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், உரிய ஆவணங்களின்றிப் பணியாற்றிய சீனா, வங்காளதேசத்தைச் சேர்ந்த 22 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். பிளாஸ்டிக் மறுசுழற்சி உரிமத்தை மறைவிடமாகப் பயன்படுத்தி, லாரிகள், கொள்கலன்கள் மூலம் கொண்டு வரப்படும் மின்னணு கழிவுகளை இந்தத் தொழிற்சாலை சட்டவிரோதமாகச் சுத்திகரித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகாரிகளின் வருகையை முன்கூட்டியே கண்டறிய இந்தத் தொழிற்சாலை நவீனக் கண்காணிப்பு, எச்சரிக்கை அமைப்புகளைக் கொண்டிருந்தது. சோதனையின் போது தொழிற்சாலையின் பாதுகாவலர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுத்ததோடு, அங்கிருந்த தொழிலாளர்கள் தப்பிச் செல்லவும் முயன்றனர். 

இந்த மோதலில் குடிவரவுத் துறை அதிகாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் சீன நாட்டவர் என்றும், 15 பேர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குடிவரவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் தங்களது பயண அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தியதும், சிலர் காலாவதியான விசாவுடன் தங்கியிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு உள்ளூர் நபருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குடிவரவுச் சட்டம், தொழிலாளர் சட்டங்களின் கீழ் இந்தத் தொழிற்சாலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டங்களை மீறிச் செயல்படும் இத்தகைய சட்டவிரோதத் தொழிற்சாலைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset