நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாப்பிட்ட கடனைத் திருப்பிக் கேட்டதால் ஆத்திரம்: கத்தியுடன் உணவகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட நபர் கைது

ஷா ஆலம்: 

கோலா லங்காட், தெலோக் மெங்குவாங் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய உணவுக் கடனைத் திருப்பித் தருமாறு கேட்ட ஊழியரை, இறைச்சி வெட்டும் கத்தி, பிரம்பால் தாக்க முயன்ற 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைப் போலிசார் கைது செய்துள்ளனர். 

நேற்று மாலை 3.30 மணியளவில் ஜாலான் பண்டான் 2-இல் அமைந்துள்ள கடல் உணவு உணவகத்தில் புகுந்த அந்த நபர், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், உணவகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசாரையும் அந்த நபர் ஆவேசமாகத் தாக்க முயன்றுள்ளார். கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், போலிஸ் வாகனத்தையும் சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. 

காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் அந்த நபர் தடுத்து நிறுத்தப்பட்டு, விசாரணைக்காகக் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பிடிபட்ட நபர் வேலை இல்லாதவர் என்பதும், அவர் மீது ஏற்கனவே நான்கு குற்றப் பதிவுகளும் ஒரு போதைப்பொருள் வழக்கும் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த நபர் மீது அரசுப் பணியாளரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல், அனுமதியின்றி ஆபத்தான ஆயுதங்களை வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது கோலா லங்காட் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தையோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்டப் போலிஸ் தலைவர் சூப்பிரிடெண்டன் முஹம்மத் அக்மல்ரிசால் ராட்ஸி கேட்டுக்கொண்டுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset