நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் குடிவரவுத் துறையின் 'ஓப் கெகார்' அதிரடி சோதனை: 69 வெளிநாட்டவர்கள் கைது

கோலாலம்பூர்: 

தலைநகர் ஜாலான் பாராட்டில் உள்ள மூன்று அடுக்குமாடி பொழுதுபோக்கு மையத்தில் குடிவரவுத் துறை நடத்திய 'ஓப் கெகார்' (Op Gegar) அதிரடி சோதனையின் போது, பிடிபடாமல் இருப்பதற்காகப் பணிப்பெண்கள் சிலர் கூரையின் மீது ஏறித் தப்ப முயன்றனர். 

கவர்ச்சியான ஆடைகள், உயரமான காலணிகள் அணிந்திருந்த போதிலும், அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க அவர்கள் மேற்கொண்ட இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. புத்ராஜெயா குடிவரவுத் துறை அமலாக்கப் பிரிவினரால் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கூரையில் பதுங்கியிருந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சோதனையின் போது மொத்தம் 198 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகப் தங்கியிருந்த 69 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். 

கைதானவர்களில் தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, லாவோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 66 பெண்களும், மியான்மர், வங்காளதேசத்தைச் சேர்ந்த 3 ஆண்களும் அடங்குவர்.

சமூக வருகை அனுமதிச் சீட்டைப் (Social Visit Pass) பயன்படுத்திச் சட்டவிரோதமாகப் பணியில் ஈடுபட்டதே இவர்கள் செய்த முக்கிய குற்றமாகும். விசாரணையின் போது, "தாங்கள் கணவருடன் வந்திருப்பதாகவும்", "வீட்டில் இருக்கும் கணவரைத் தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்றும் அவர்கள் கூறிய காரணங்களை அதிகாரிகள் நிராகரித்தனர்.

குடிவரவுத் துறையின் இந்தச் சோதனையானது லஞ்ச ஒழிப்பு ஆணையம் (SPRM), சுங்கத்துறை உள்ளிட்ட பிற ஏஜெண்டுகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. 

இந்த ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட இத்தகைய சோதனைகளில் மொத்தம் 670 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குடிவரவுத் துறை துணை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி தெரிவித்தார். 

சட்டவிரோதக் குடியேறிகளைப் பணியில் அமர்த்தும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாட்டின் சட்டங்களை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வித சமரசமும் இன்றி தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset