நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒலிப்பான்களும் சைரன் ஒலிகளும் கேட்காத அவலம்: அன்றாட வாழ்வில் செவித்திறன் குறைபாடுடையோர் சந்திக்கும் சவால்கள்

குவாந்தான்: 

தகவல் தொடர்பு வசதிகள், முறையான அணுகல் வசதிகள் இல்லாத காரணத்தால், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

42 வயதான முஹம்மத் ஃபிர்தவுஸ் பணியிடங்களில் மற்றவர்களின் உரையாடல்களைப் புரிந்துகொள்ளக் குரலை உரையாக, நவீனத் தொழில்நுட்பத்தை நாடினாலும், வட்டார மொழி வழக்குகள், கலப்பு மொழிகளால் அத்தொழில்நுட்பம் சரியான தகவலைத் தருவதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். சேவை மையங்களில் சைகை மொழி தெரிந்த பணியாளர்கள் இல்லாதது இவர்களது சிரமத்தை மேலும் அதிகரிப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

மறுபுறம், வாகனப் பழுதுபார்ப்பவராகப் பணியாற்றும் முஹம்மத் தக்கியுத்தீன், ஒலிகளைக் கேட்க முடியாத சூழலில் அதிர்வுகள், தொடுதல் உணர்வின் மூலமே இயந்திரக் கோளாறுகளைக் கண்டறிவதாகக் கூறுகிறார். 

சாலையில் செல்லும் போது வாகனங்களின் ஒலிப்பான்கள் அல்லது அவசர சிகிச்சை வாகனங்களின் எச்சரிக்கை ஒலிகளைக் கேட்க முடியாதது தங்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். 

இத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்குக் காட்சி வழித் தகவல்களும், ஊடகங்கள், அரசு நிறுவனங்களின் சைகை மொழி காணொலிகளும் மிக அவசியமான ஒன்றாக உள்ளன.

இது குறித்துப் பேசிய சமூகத் தொடர்பு அதிகாரி செ அஸ்லிண்டா, சைகை மொழியின் போது வெளிப்படும் முகபாவனைகள் பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாகக் கூறுகிறார். 

உதாரணமாக, சைகை மொழியில் நெற்றியைச் சுருக்குவது ஒரு கேள்வியைக் குறிக்கும் அடையாளமே தவிர, அது கோபத்தை வெளிப்படுத்துவது அல்ல. இத்தகைய புரிதல் இன்மையால் செவித்திறன் குறைபாடுடையோர் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் சூழல் உருவாவதாகவும், தங்களைச் சமமாக நடத்தித் தங்களின் உணர்வுகளுக்குச் சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என்பதே இவர்களது எதிர்பார்ப்பாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset