நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கைபேசியில் 100 ஆபாசக் காணொலிகள்: உணவகப் பணிப்பெண்ணுக்கு RM2,000 ரிங்கிட் அபராதம்

பாச்சோக்: 

தனது கைபேசியில் சுமார் 100 ஆபாசக் காணொலிகளை வைத்திருந்த 32 வயது உணவகப் பணிப்பெண்ணுக்கு, பாச்சோக் நீதிமன்றம் இன்று RM2,000 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது. 

குற்றம் சாட்டப்பட்ட சித்தி முனிரா முஹம்மத், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிபதி ஃபக்ருல் ரஸ்ஸி அப்துல் ஹமீத் இந்தத் தண்டனையை வழங்கினார். 

கடந்த திங்கட்கிழமை இரவு, கம்போங் குபாங் தெலகாவில் உள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், அவரது கைபேசியில் இருந்த ஆபாசக் காணொலிகள் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.

கிளாந்தான் மாநிலக் காவல்துறை தலைமையகத்தின் பாலியல், இணையக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட 'ஓப் சைபர் கார்டியன்' (Op Cyber Guardian) நடவடிக்கையின் மூலம் இந்தப் பெண் பிடிபட்டார். 

அவரது கைபேசியை ஆய்வு செய்த தடயவியல் துறை, அதில் ஆபாசக் காணொலிகள் இருப்பதை உறுதி செய்தது. தண்டனைச் சட்டம் 292-வது பிரிவின் கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கிற்கு, அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நீதிமன்ற விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒரு தற்காலிக உணவகப் பணிப்பெண் என்றும், ஒரு நாளைக்கு RM35 ரிங்கிட் மட்டுமே வருமானம் ஈட்டும் ஒரு கைம்பெண் என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். 

தனக்கு 15 வயதில் ஒரு மகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தனது செயலுக்காக வருந்துவதாகவும் இனி இத்தகைய தவறுகளைச் செய்ய மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.

இதைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், RM2,000 ரிங்கிட் அபராதம் விதித்ததுடன், அதைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அந்தப் பெண் அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset