நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜெல்லி மீன்களால் பூக்கெட் கடற்கரையில் பரபரப்பு: சுற்றுலாப் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்

பூக்கெட்:

தாய்லாந்தின் பூக்கெட் தீவில் உள்ள ரச்சா யாய் கடற்கரைப் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட 'நிலா ஜெல்லி மீன்கள்' (Moon Jellyfish) கரை ஒதுங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த வகை ஜெல்லி மீன்கள் பொதுவாக உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றாலும், அவற்றைத் தொடும்போது தோலில் சிவப்பு நிறத் தடிப்புகள், அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அந்தமான் கடல் வள ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மென்மையான தோல் கொண்டவர்கள், ஒவ்வாமை (Allergies) உள்ளவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், கடற்கரைக்கு வருவோர் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஜெல்லி மீன்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவி குறிப்புகளையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக நீரை விட்டு வெளியேற வேண்டும்; எரிச்சல் உள்ள இடத்தில் வினிகர் (Vinegar) அல்லது கடல் நீரை ஊற்றிக் கழுவ வேண்டுமே தவிர, குடிநீரையோ அல்லது மற்ற திரவங்களையோ பயன்படுத்தக் கூடாது. மேலும், கைகளால் அந்த இடத்தைத் தேய்க்கக் கூடாது என்றும், மூச்சுத் திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை காலத்தையொட்டி கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கடல் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜெல்லி மீன்கள் கடலில் மிதப்பதையோ அல்லது கரையில் ஒதுங்கிக் கிடப்பதையோ பார்த்தால், எக்காரணத்தைக் கொண்டும் அவற்றைத் தொட வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஒருவேளை யாராவது மயக்கமடைந்தால், மருத்துவக் குழுவினர் வரும் வரை அவர்களுக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை மேற்கொள்ளவும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset