செய்திகள் உலகம்
குடும்ப உறுப்பினர்களால் நேர்ந்த கொடூரம்: 19 ஆண்டுகளில் 486 முதியவர்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
ஒசாகா:
ஜப்பானில் கடந்த 2006 முதல் 2024 வரையிலான நிதியாண்டுகளில், தங்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே சுமார் 500 முதியவர்கள் கொல்லப்பட்ட அல்லது சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த திடுக்கிடும் தகவல் அரசாங்க அறிக்கையின் மூலம் வெளியாகியுள்ளது.
நாட்டின் சுகாதாரம், தொழிலாளர், நலத்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 65 வயதுக்கு மேற்பட்ட 486 முதியவர்கள் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 344 பெண்களும் 142 ஆண்களும் அடங்குவர்.
இந்த மரணங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆய்வு செய்ததில், முதியவர்களைப் பராமரிப்பதில் ஏற்படும் அதீத உடல், மனச்சோர்வு, தனிமைப்படுத்தப்படுதல், நிதி நெருக்கடி ஆகியவை முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக, 80 முதல் 84 வயதுக்குட்பட்ட முதியவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலோர் பாதிக்கப்பட்டவர்களின் மகன்கள், கணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட 220 வழக்குகளில் கொலை, தற்கொலை முயற்சி, குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சிகள் அடங்கும். மேலும் 132 மரணங்கள் முதியவர்களைக் கவனிக்காமல் கைவிட்டதாலும், 69 மரணங்கள் நேரடி வன்கொடுமையாலும் நிகழ்ந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் 54 விழுக்காட்டினர் எந்தவிதமான நீண்டகாலப் பராமரிப்பு காப்பீட்டுச் சேவைகளையும் பெறாதவர்கள் என்பது, சமூக ஆதரவு அமைப்பின் பலவீனத்தைக் காட்டுகிறது.
தற்போது ஜப்பானில் தனிமையில் வாழும் முதியவர்களின் எண்ணிக்கை 1.7 கோடியைத் தாண்டியுள்ளது. முதியவர்களைப் பராமரிப்பவர்களும் முதியவர்களாகவே இருக்கும் நிலை அதிகரித்துள்ளதால், இத்தகைய வன்முறைகள் பெருகி வருவதாகக் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் உண்மையான பாதிப்பின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்றும், முதியோர் பாதுகாப்பு, ஆதரவு அமைப்புகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 12:48 pm
எரிசக்தி நெருக்கடியால் மங்கும் சொங்க்ரான் கொண்டாட்டம்: தாய்லாந்து சுற்றுப்பயணத் துறை கடும் சரிவு
April 5, 2026, 11:46 am
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் 14 வயது மாணவன்
April 5, 2026, 10:52 am
லாவோஸில் 40 டிகிரி செல்சியஸைத் தொடும் கடும் வெப்பம்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
April 4, 2026, 4:55 pm
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்: 8 பேர் மரணம்
April 4, 2026, 2:52 pm
