நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்லைக் கண்காணிப்பில் புதிய வியூகம்: கடத்தல்காரர்களைப் பிடிக்க டிஜிட்டல் முறையில் கண்காணிப்பு

கோத்தா பாரு: 

மலேசிய எல்லைப் பகுதிகளில் மானியப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, தற்போதுள்ள அமலாக்கப் பிரிவினரின் வலிமையைக் கொண்டே தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவு அமைச்சு (KPDN) தெரிவித்துள்ளது. 

புதிய அதிகாரிகளை நியமிப்பது அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதால், தற்போதுள்ள மனிதவளத்தை மிகச்சரியான முறையில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி தெரிவித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்புப் படை (PGA) உள்ளிட்ட பிற பாதுகாப்பு முகமைகளுடன் இணைந்து இந்தக் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தப்படும். குறிப்பாக, எரிபொருள் கடத்தலைத் தடுக்க எல்லைக்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தினசரி கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சர் 'ஓப்ஸ் திரிஸ் 4.0' (Ops Tiris 4.0) விளக்கக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

கிளாந்தான் மாநிலத்தில் மட்டும் எல்லைப் பகுதியிலிருந்து 25 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள 48 எரிபொருள் நிலையங்கள், கடத்தல் அபாயம் அதிகம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இந்தப் பகுதிகளில் முறையற்ற எரிபொருள் விற்பனை, பதுக்கலைத் தவிர்க்க, அதிகாரிகள் அடிக்கடி அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான மானியப் பொருட்கள் முறைகேடாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதைத் தடுத்து, நாட்டின் பொருளாதார இழப்பைக் குறைப்பதே இந்தத் தீவிரக் கண்காணிப்பின் முக்கிய நோக்கமாகும்.

பொதுமக்களும் இது போன்ற சட்டவிரோதச் செயல்கள் குறித்துத் தகவல் தெரிந்தால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset