நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலையோரம் கவிழ்ந்து பற்றி எரிந்த லாரி: 55 வயது ஓட்டுநர் பலி

கோத்தா பெலுட்: 

சபா மாநிலத்தின் கோத்தா பெலுட், உலு குகுட் சாலையில் இன்று காலை நிகழ்ந்த ஒரு விபத்தில், கற்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் 55 வயதுடைய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மலேசிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்து நிகழ்ந்தபோது மோதிய வேகத்தில் ஓட்டுநர் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதாக நம்பப்படுகிறது. லாரி கவிழ்ந்த உடனேயே தீப்பிடித்து எரியத் தொடங்கிய நிலையில், உயிரிழந்த ஓட்டுநர் லாரிக்கு அருகில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 

காலை 11.36 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்பு, மீட்புத் துறையினர், இரண்டு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

கோத்தா பெலுட் தீயணைப்பு நிலையத் தலைவர் எல்ஜி பாகுக் இது குறித்துக் கூறுகையில், மீட்புப் படையினர் மதியம் 12.10 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாகத் தெரிவித்தார். உயிரிழந்த ஓட்டுநரின் உடல் மீட்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காகப் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக உலு குகுட் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வாகனத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்துப் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset