நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெந்தோங் இராணுவ வீரர் தாக்குதல் வழக்கு: 15 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

பெந்தோங்:

பெந்தோங், ராயல் மலாய் இராணுவப் படையின் (RAMD) 25-வது பட்டாலியன் முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, இதுவரை 15 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகப் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீரரின் தந்தை, இராணுவ அதிகாரிகள், சக வீரர்கள், மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஆயுதக் கிடங்கைச் சுத்தம் செய்வது தொடர்பான அதிருப்தியில் ஏற்பட்ட இந்த மோதலில், 24 வயதுடைய முஹம்மத் அமிருல் ரசிக் என்ற வீரர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். 

மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் தடைப்பட்டதால் அவர் தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவர் இன்னும் நினைவு திரும்பவில்லை என்றும், செயற்கைச் சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் பெந்தோங் மாவட்டப் போலிஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டென்ட் ஜைஹாம் முஹம்மத் கஹார் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் 30-ஆம் தேதி இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில், கீழ்நிலை அதிகாரி ஒருவர் முஹம்மத் அமிருல் உட்பட ஏழு வீரர்களைச் சரமாரியாகத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 37 வயதுடைய கோப்ரல் தரவரிசை கொண்ட இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுப் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட வீரரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் இராணுவ முகாமிற்குள்ளேயே சக வீரர் ஒருவரால் இத்தகைய கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset