நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பஹாங்கில் பரபரப்பு: ஆற்றில் மூழ்கிய இரண்டு மாணவர்கள் பலி

ஜெராண்டுட்: 

பஹாங் மாநிலத்தின் ஜெராண்டுட், கம்போங் டுரியான் ஹிஜாவ் பகுதியில் ஆற்றில் மூழ்கி மாயமான மாணவரின் உடல் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த தேடுதல், மீட்புப் பணி நிறைவுக்கு வந்துள்ளது.

பலியான 14 வயது மாணவர் முஹம்மத் அமிருல் அஷ்ரப் அப்துல்லாவின் உடல், அவர் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 9.50 மணியளவில் பொதுமக்களால் கண்டறியப்பட்டது. 

முன்னதாக, அவருடன் சென்ற முஹம்மத் டேனியல் ஹைக்கல் என்ற மற்றொரு மாணவரின் உடல் நேற்று மாலை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பஹாங் மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் அதிகாரி முஹம்மத் சலாவுதீன் ஈசா கூறுகையில், மீட்கப்பட்ட மாணவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காகப் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனைக்காக உடல் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இடைநிலைப்பள்ளி மாணவர்களான இவர்கள் இருவரும், கடந்த வெள்ளிக்கிழமை மாலை தங்களது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்தத் துயரச் சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset