செய்திகள் உலகம்
எரிசக்தி நெருக்கடியால் மங்கும் சொங்க்ரான் கொண்டாட்டம்: தாய்லாந்து சுற்றுப்பயணத் துறை கடும் சரிவு
பாங்காக்:
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, தாய்லாந்தின் புகழ்பெற்ற 'சொங்க்ரான்' நீர் திருவிழா இந்த ஆண்டு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
சர்வதேச அளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை, அதிகரித்துள்ள பயணச் செலவுகளால், தாய்லாந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தாய்லாந்து சுற்றுலா ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தெற்கு தாய்லாந்து பகுதிகளுக்கு வழக்கமாக வருகை தரும் மலேசியப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு பாதியாகக் குறைந்துள்ளது.
ஹட்யாய்-சோங்க்லா ஹோட்டல் சங்கத்தின் தலைவர் டாக்டர் சித்திபோங் கூறுகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 10 முதல் 13 வரையிலான காலக்கட்டத்தில் 30,000 அறைகள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 15,000 அறைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும், ஹோட்டல் தங்குமிட விகிதம் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இதனால் விமானக் கட்டணங்கள், போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால், சீனா, மலேசியா, இந்தியா போன்ற அண்டை நாட்டுப் பயணிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் தாய்லாந்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீனப் பயணிகளின் வருகை 38 விழுக்காடு அதிகரித்துள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்த நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு, தாய்லாந்து அரசு தனது 2026-ஆம் ஆண்டுக்கான சுற்றுலா இலக்கை மாற்றியமைத்துள்ளது. முன்னதாக 3.67 கோடியாக எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டுப் பயணிகளின் வருகை, தற்போது 3.21 கோடியாகக் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 11:46 am
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் 14 வயது மாணவன்
April 5, 2026, 10:52 am
லாவோஸில் 40 டிகிரி செல்சியஸைத் தொடும் கடும் வெப்பம்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
April 4, 2026, 4:55 pm
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்: 8 பேர் மரணம்
April 4, 2026, 2:52 pm
