நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனமழை எச்சரிக்கை: 4 மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பு

கோலாலம்பூர்: 

தலைநகர் கோலாலம்பூர் உட்பட நாட்டின் நான்கு மாநிலங்களில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் திடீர் வானிலை மாற்றத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தீபகற்ப மலேசியாவில் பேராக் மாநிலத்தின் பாகான் டத்தோ, ஹிலிர் பேராக் பகுதிகளும், சிலாங்கூர் மாநிலத்தில் சபாக் பெர்னாம், கிள்ளான், கோம்பாக் உள்ளிட்ட பல மாவட்டங்களும் இந்த எச்சரிக்கைக்கு உட்பட்டுள்ளன. மேலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெலெபு பகுதி, தலைநகர் கோலாலம்பூர் முழுவதிலும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மலேசியாவைப் பொறுத்தவரை, சரவாக் மாநிலத்தின் காபிட், மீரி, லிம்பாங் ஆகிய பகுதிகளிலும் இதே போன்ற சீரற்ற வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. 

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் போதோ அல்லது ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போதோ இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையானது அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும் குறுகிய கால முன்னெச்சரிக்கை அறிவிப்பாகும். எனவே, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset