செய்திகள் உலகம்
ஈரானின் மருத்துவமனைகள் மீது குண்டுமழை: உலக சுகாதார மையம் கண்டனம்
பாரிஸ்:
அமெரிக்கா-இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஈரானின் சுகாதார வசதி அமைப்பை ஆதரிக்க உடனடி உதவியை உலக சுகாதார மையம் (WHO) கோரியுள்ளது.
மேற்காசியாவில் மோதல் உச்சகட்டத்தை நோக்கி செல்லும் நிலையில் சமீபத்திய நாட்களில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சுகாதார வசதிகள் மீதான பல தாக்குதல்கள் அறிவிக்கப்பட்டதாக உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெபிரேயேசஸ் கூறினார்.
தெஹ்ரானில் உள்ள பொது சுகாதார, ஆராய்ச்சி மையமான ஈரான் பாஸ்டர் நிறுவனம் சுகாதார சேவைகளை மேலும் தொடர்வதை முடியாமல் செய்யும் அளவிலான கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த வசதி, உலக சுகாதார மையம் உறுதிப்படுத்திய அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களில் இலக்கான 20 சுகாதார வசதிகளில் ஒன்றாகும்.
எனினும், சேதம் ஏற்பட்டாலும் தடுப்பூசி, சீரம் உற்பத்தி தொடர்வதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் சுகாதார அமைச்சகத்தின் செய்தியாளர் ஹொஸ்சைன் கெர்மான்பூர் கடந்த வியாழக்கிழமை X தளத்தில் கட்டிடம் கடுமையாக சேதமடைந்திருந்த படங்களைப் பகிர்ந்துகொண்டார்.
1920-ல் நிறுவப்பட்டு பாரிஸிலுள்ள அசல் நிறுவனத்துடன் அதிகாரப்பூர்வ தொடர்பு இல்லாத ஈரான் பாஸ்டர் நிறுவனம், அவசர காலங்கள் உட்பட பொது சுகாதாரத்தை பாதுகாப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்று டெட்ரோஸ் கூறினார்.
ஈரானுடன் சேர்ந்து, ஈராக், ஜோர்டான், லெபனான், சிரியாவின் சுகாதார அமைப்புகளுக்கும் உடனடி உதவி வழங்குமாறு டெட்ரோஸ் கோரினார்.
மோதலால் சுமார் நான்கு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 30,000 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல், அமெரிக்கா யுத்தத்தின் ஆரம்ப வாரங்களில் கவனம் செலுத்திய இராணுவ, பாதுகாப்பு, நிர்வாக உள்கட்டமைப்பைத் தாண்டி தாக்குதல் இலக்குகளை விரிவாக்குவதாக காட்டப்படுகிறது.
சமீபத்திய நாட்களில் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து உள்கட்டமைப்பும் தாக்குதல்களுக்கு இலக்கானது.
நேற்று, ஈரான் செய்தி நிறுவனம் மேர் தெரிவித்தபடி, தெஹ்ரானில் உள்ள ஷாஹிட் பேஹேஷ்டி பல்கலைக்கழகத்தில் உள்ள லேசர், பிளாஸ்மா ஆராய்ச்சி வசதி மீது தாக்குதல் நடைபெற்றதாக ஈரான் செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது.
இஸ்ரேல் இதற்கு முன்பு இமாம் ஹொஸ்சைன் பல்கலைக்கழகம், மாலிக்-அஷ்தர் பல்கலைக்கழகங்களையும் இராணுவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதாக கூறி இலக்காக்கியது.
மேலும் சென்ற செவ்வாயன்று மயக்க மருந்துகள், புற்றுநோய் மருந்துகளை உற்பத்தி செய்யும் ஈரானின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான தோஃபிக் தாரு மீதும் தாக்குதல் நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெலாரம் சினா மனநல மருத்துவமனையும் கடுமையான சேதத்திற்கு உள்ளானதாக டெட்ரோஸ் கூறினார்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஒப்புக்கொண்ட போர் விதிகளான ஜெனீவா மாநாட்டின் கீழ் சுகாதார வசதிகள் பாதுகாக்கப்படுகின்றன.
இதுவரை யுத்தத்தில் 307 சுகாதாரம், மருத்துவம், அவசர கால வசதிகள் சேதமடைந்திருப்பதாக ஈரான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது.
சர்வதேச சட்டம் பொது உள்கட்டமைப்பைத் தாக்குவதை தடைசெய்கிறது என்றாலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 'ஈரானை கல் யுகமாக மாற்றுவோம்' என்று அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதங்களை உருவாக்கும் தளமாக ஈரான் உருவெடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த 28 பிப்ரவரி ஈரான் மீது போர் தொடுத்து வருகின்றன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 4:55 pm
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்: 8 பேர் மரணம்
April 4, 2026, 11:38 am
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஹோர்முஸ் நீரிணையை நீண்ட காலத்திற்கு மூட ஈரான் முடிவு
April 4, 2026, 8:15 am
அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது
April 3, 2026, 4:12 pm
பிரஞ்சு அதிபரின் மண வாழ்க்கை சரியில்லை என்று கூறிய அமெரிக்க அதிபருக்கு மக்ரோன் பதிலடி
April 3, 2026, 3:55 pm
