நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிபொருள் விலையை நிலைநிறுத்த அரசு அதிரடி நடவடிக்கை: மக்களுக்கு RM4 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

ஷா ஆலம்: 

உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு, விநியோகச் சங்கிலித் தட்டுப்பாடுகளால் மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க, மலேசிய அரசு சுமார் RM4 பில்லியன் ரிங்கிட் நிதியைச் செலவிட்டுள்ளதாக  பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகர், தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். 

இந்த நிதியுதவியின் மூலம் ரோன்95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு RM1.99 ரிங்கிட் என்ற நிலையான விலையில் பராமரிக்க முடிந்துள்ளதாகவும், தகுதியுள்ள துறைகளுக்கான டீசல் மானியம் தடையின்றி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை மக்கள் முழுமையாகச் சுமக்காத வகையில், அரசு திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வருவதாகத் தெங்கு ஜஃப்ருல் சுட்டிக்காட்டினார். 

அண்டை நாடுகளில் எரிபொருளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும் சூழலிலும், மலேசியாவின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் உறுதியாக இருப்பதால் விலையை மாற்றாமல் நிலைநிறுத்த முடிந்துள்ளதாக அவர் விவரித்தார். 

அரசின் நோக்கம் வெறும் விளக்கங்களைக் கொடுப்பதல்ல, மாறாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதே ஆகும் என்று அவர் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி மேலும் சவால்களைச் சந்தித்தால், நிலைமைக்கு ஏற்ப கூடுதல் ஊக்குவிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தவும் அரசு தயாராக உள்ளது. நிதி ஒழுக்கத்தைப் பேணுவது முக்கியம் என்றாலும், மக்களின் வாழ்வாதாரச் செலவுகளைக் கருத்தில் கொள்ளாமல் வெறும் புள்ளிவிவரங்களை மட்டும் நம்பி அரசு செயல்படாது என்றும் அவர் கூறினார். 

மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப, சரியான நேரத்தில் துல்லியமான முடிவுகளை எடுத்து மக்களின் நலனைப் பாதுகாக்கப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசு உறுதியாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset