நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்காவியில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடியை ஒத்திவைக்கிறார்கள்

லங்காவி: 

டீசல் விலை உயர்வால் உழவு, அறுவடை செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளதால் வரும் மே மாதம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நெல் சாகுபடியை இந்தத் தீவிலுள்ள 1,098 விவசாயிகள் ஒத்திவைக்க கட்டாயப்படுகிறார்கள்.

இந்தத் தீவில் நெல் வயல்கள் 1,500 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன. மழை நீர் விநியோகத்தை சார்ந்து மே, ஆகஸ்டு என்று ஆண்டுக்கு இரண்டு முறை நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

லங்காவி விவசாய மண்டல சங்கத்தின் (PPK) தலைவர் ஹாசிம் சாட், திடீரென்று டீசல் விலை லிட்டருக்கு RM6.02 ஆக உயர்ந்தது உழவு, அறுவடை இயந்திர உரிமையாளர்களை 30 சதவீதத்திற்கும் அதிகமாக கூலியை உயர்த்த கட்டாயப்படுத்துவதாக கூறினார்.

முன்பு 0.3 ஹெக்டேர் (ஒரு ஏக்கர்) நெல் வயலை உழவு செய்வதற்கான செலவு சுமார் RM300 ஆக இருந்தது, ஆனால் டீசல் விலை உயர்வால் அதே பரப்பளவிற்கு இயந்திர கூலி RM450 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

"நெல் வயல் உழவு செயல்முறைக்கு மூன்று கட்டங்கள் தேவை — கரடுமுரடான உழவு, நுண்ணிய உழவு, இறுதி உழவு என மூன்று படிநிலைகளில் செயல்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் டீசல் இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன" என்று இன்று இங்கு கம்போங் புக்கிட் ஹாந்து நெல் சேகரிப்பு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹம்மத் சுஹைமி அப்துல்லாவும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

விவசாயிகளுக்கு சுமையாக மாறும் கூலி செலவு உயர்வை தவிர்க்க, இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு அரசாங்கம் டீசல் மானியம் வழங்க வேண்டும் என்று ஹாசிம் கூறினார்.

"இப்போது போன்று டீசல் விலை அழுத்தம் மே வரை தொடர்ந்தால், லங்காவி விவசாயிகளுக்கு இந்த ஆண்டின் முதல் பருவ நெல் சாகுபடியை ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று அவர் தெரிவித்தார்.

அதே நிகழ்வில், டீசல் விலை உயர்வால் நெல் வயல் நடவடிக்கை செலவு அதிகரிப்பு குறித்த நினைவுப்பத்திரத்தை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமிடம் சமர்பிக்குமாறு முஹம்மத் சுஹைமிக்கு ஹாசிம் கையளித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset