நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பூலோவில் அதிரடி சோதனை: விதிமீறலில் ஈடுபட்ட வெளிநாட்டவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல்

சுங்கை பூலோ: 

சிலாங்கூர், சுங்கை பூலோ சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, பழைய இரும்பு சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த ரோஹிங்கியா அகதி ஒருவரின் மோட்டார் சைக்கிளைச் சிலாங்கூர் மாநிலப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.'ஒப் பேவா' (Op PEWA) எனப்படும் வெளிநாட்டு ஓட்டுநர்களைக் கண்காணிக்கும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

பிடிபட்ட 30 வயது மதிக்கத்தக்க அந்த வெளிநாட்டவர், முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது சோதனையில் தெரியவந்தது. மேலும், அந்த வாகனத்திற்கான சாலை வரி காலாவதியாகி இருந்ததோடு, காப்புறுதிச் சான்றிதழ் ஏதுமின்றியும் அவர் அந்த வாகனத்தைச் செலுத்தி வந்துள்ளார். 

இது தவிர, வாகனத்தின் பின்விளக்கு, நிறுத்த விளக்கு செயல்படாதது போன்ற பல்வேறு தொழில்நுட்பக் குறைபாடுகளும் அந்த மோட்டார் சைக்கிளில் கண்டறியப்பட்டன.

விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவரது மோட்டார் சைக்கிள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு இஜோக் (Ijok) அமலாக்க நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. 

சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவும், விபத்துகளைத் தவிர்க்கவும் வெளிநாட்டு ஓட்டுநர்கள் மீதான இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று சிலாங்கூர் மாநிலப் போக்குவரத்துத் துறை இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாகப் பொதுமக்கள் ஏதேனும் புகார்களை அளிக்க விரும்பினால், அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி அல்லது 'இ-அடுவான்' (e-aduan) செயலி வழியாகத் தகவல்களை வழங்கலாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சாலைப் பாதுகாப்பைப் பேணுவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset