நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

போலிஸ் சோதனையிலிருந்து தப்பிக்கப் புதிய வியூகம்: ஒட்டகங்கள் மூலம் மதுக் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

டெல்லி: 

இந்தியத் தலைநகர் டெல்லியில், ஒட்டகங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மதுபானங்களைக் கடத்திய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அண்டை மாநிலமான ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரிலிருந்து, அதிக அளவிலான மதுபானப் பொட்டலங்களை இரண்டு ஒட்டகங்களின் மீது ஏற்றி வந்தபோது, மார்ச் 30-ஆம் தேதி இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

டெல்லியில் மதுபானங்களுக்கான வரி அதிகமாக இருப்பதால், லாபம் ஈட்டும் நோக்கில் ஃபரிதாபாத்திலிருந்து மதுபானங்கள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. 

நெடுஞ்சாலைகளில் காவல்துறையினரின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், சோதனையிலிருந்து தப்பிக்கக் கடத்தல்காரர்கள் காட்டுப்பாதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

வாகனங்களுக்குப் பதிலாக ஒட்டகங்களைப் பயன்படுத்தினால் சந்தேகம் வராது என்ற நோக்கில் இத்தகைய புதிய முறையை அவர்கள் கையாண்டுள்ளனர்.

பிடிபட்ட அதே ஒட்டகங்கள் ஏற்கனவே 2025-ஆம் ஆண்டிலும் இதே போன்ற மதுக் கடத்தல் குற்றத்திற்காகப் பறிமுதல் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லையைத் தாண்டியவுடன் ஒட்டகங்களிலிருந்து மதுபானங்களை இறக்கி, பின்னர் ரிக்‌ஷாக்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது கடத்தப்பட்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீட்கப்பட்ட ஒட்டகங்கள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset