நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்லைப்பகுதியில் போலிசாரின் துப்பாக்கிச் சூடு: 510 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கும்பல்

கங்கார்: 

பெர்லிஸ் மாநிலத்தின் வாங் கெலியான், காக்கி புக்கிட் பகுதிகளில் கடந்த மார்ச் 24 முதல் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில், RM25.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 510 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருளைப் போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். 

அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக, குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வது போல் தனது மனைவியையும் அழைத்துச் சென்று இக்கும்பல் இக்கடத்தலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையின் போது, தப்பியோட முயன்ற கடத்தல்காரர்களின் வாகன டயர்களை நோக்கிப் போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நிலைகுலைந்த வாகனங்களிலிருந்து ஒரு பெண் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

23 முதல் 37 வயதுக்குட்பட்ட இவர்களில் நான்கு பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இக் கும்பலைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தாய்லாந்து நாட்டிற்குத் தப்பியோடியுள்ள நிலையில், அவரைப் பிடிக்கப் போலிசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இக்கும்பல் காப்பகக் காடுகள், கடல் வழிப்பாதைகளைப் பயன்படுத்திப் போதைப்பொருளைக் கடத்தி வந்துள்ளது.

காடுகளின் வழியாகச் சிறு சிறு குழுக்களாகப் போதைப்பொருளைச் சுமந்து வரும் 'எறும்புப் படை' (Tentera Semut) முறையை இவர்கள் கையாண்டுள்ளனர். சோதனையின் போது 6 சொகுசு கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் உட்பட RM5.6 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு 11 போதைப்பொருள் குற்றப் பின்னணிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் இவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனப் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset