செய்திகள் மலேசியா
வறட்சியால் பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு RM1 மில்லியன் இழப்பு
கோத்தா பாரு:
நீண்டகால வறட்சியால் நெல் பயிர்கள் அழிந்ததால் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் RM1 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் கம்போங் பேலுகார், கம்போங் சலோர், கம்போங் பேத்தா ஹிலிர் உட்பட இங்குப் பல கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர்.
தஞ்சோங் புரி கெமுபு விவசாய வளர்ச்சி வாரியத்தின் (KADA) விவசாயி பிரதிநிதி ஹாஃபிஸுல் தாவுத், ஆறு சாகுபடி பருவங்களில் மிக மோசமான வறட்சியால் சுமார் 50 ஹெக்டேர் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
"காடா, சம்பந்தப்பட்ட துறைகள் உண்மையான நிலைமையை நேரில் பார்க்க வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பயிரைக் காப்பாற்ற நீர் பம்ப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது, ஆனால் செலவு மிகவும் அதிகமாக உள்ளது. அரசாங்கம் எங்களுக்கு முடிந்தவரை உதவும் என்று நம்புகிறோம்" என்று சந்தித்த போது அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் கெமுபு பாசன திட்டத்திலிருந்து நீர் விநியோக பிரச்சினையை எதிர்கொள்வதால் நீர் ஆதாரங்களை பெறுவதற்கு கூடுதல் செலவைச் சுமக்க வேண்டியிருப்பதாகவும் ஹாஃபிஸுல் கூறினார்.
"இது இதுவரையில் மிக மோசமான ஆறாவது பருவம். பிள்ளைகளின் படிப்பு உட்பட எங்களுக்குப் பல கடமைப்பாடுகள் உள்ளன. இயந்திரங்கள், பிற செலவுகளுக்காக ஏற்கனவே அதிக செலவிட்டிருக்கிறோம், இப்போது இழப்பையும் சுமக்க வேண்டியிருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, முஹம்மத் இசாட் ஆஃபிக் முஹம்மத் யூசுஃப் (32), சலோரில் நீர் விநியோக பற்றாக்குறையால் தனது எட்டு ஹெக்டேர் நெல் வயல்கள் விளைவதில் தோல்வியடைவதால் ஒவ்வொரு பருவத்திலும் சுமார் RM10,000 இழப்பைச் சந்திப்பதாக கூறினார்.
"நெல் விளைச்சல் 100 சதவீதம் ஆகும் என்று நம்பினேன், ஆனால் இப்படி ஆனது மிகவும் கவலையைத் தருகிறது. ஐந்து பருவங்களாக நீர் வயல்களை அடையாத பிரச்சினையை எதிர்கொள்கிறோம்.
நான் சொந்தமாக நீர் பம்ப் பயன்படுத்துகிறேன், ஆனால் ஒரு பம்புக்கு எரிபொருள் செலவு ஒரு நாளுக்கு சுமார் RM70 ஆகிறது. மூன்று முதல் ஐந்து பம்புகள் பயன்படுத்தினால் செலவு மிகவும் அதிகமாகிவிடும்.
"எங்கள் பகுதியில் குழாய் கிணறுகள் மூலம் நீர் ஆதாரம் இருக்கிறது, ஆனால் வறட்சி நீடிக்கும் போது விநியோகம் எப்போதும் போதுமானதாக இல்லை" என்று அவர் கூறினார்.
மற்றொரு விவசாயியான சிடிக் அஹ்ம்மத் முஹம்மத் நோர் (65), நீண்டகால வறட்சியால் தனது நான்கு ஹெக்டேர் வயல்கள் முழுவதும் வறண்டுவிட்டதாக தெரிவித்தார்.
"20 வயதிலிருந்து விவசாயியாக உள்ளேன், இது நான் எதிர்கொண்ட மிகவும் கடினமான சூழ்நிலைகளில் ஒன்று. நிலம் முழுவதும் வறண்டுவிட்டது. நாங்கள் சோர்ந்து போகிறோம், எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது, எங்கள் சுமை மேலும் அதிகரிக்கிறது.
"முன்பு அக்டோபரில் நீர் விநியோகம் இருந்தது, ஆனால் விரைவில் மீண்டும் நின்றுவிட்டது" என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 5:48 pm
வேலைக்குச் சென்றபோது நேர்ந்த விபரீதம்: எஸ்.பி.எம் மாணவரின் பரிதாப உயிரிழப்பு
March 30, 2026, 5:40 pm
மத்திய கிழக்குப் போர் எதிரொலி: ஏர்ஏசியா விமானக் கட்டணங்கள் உயர்கிறது
March 30, 2026, 5:35 pm
சர்வதேச நெருக்கடியிலும் தளராத நம்பிக்கை: சரவாக்கில் குவியும் வெளிநாட்டு முதலீடுகள்
March 30, 2026, 4:45 pm
பணமோசடி வழக்கில் விக்டர் சின் கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டார்
March 30, 2026, 4:45 pm
நெக்ஸ்ஜி என்பது வெறும் பெருநிறுவன நாடகம் அல்ல; இதில் பெரிய பிரச்சினைகள் உள்ளன: ரபிசி
March 30, 2026, 4:00 pm
வெப்பம் அதிகரித்தாலும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பினாங்கு கல்வித் துறை அறிவிப்பு
March 30, 2026, 3:52 pm
