நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“சமயத்தை அச்சுறுத்தலாகச் சித்தரிக்க வேண்டாம்”: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளருக்கு 'பாஸ்' கட்சி கடும் எச்சரிக்கை

ஷா ஆலம்:

உலக அமைதிக்கு இஸ்லாம் ஒரு அச்சுறுத்தல் என அமெரிக்கத் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியதாகக் கருதப்படும் கருத்திற்கு மலேசியாவின் பாஸ் கட்சி தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. 

இது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் நிலுவையில் உள்ள போதிலும், சுமார் 190 கோடி மக்கள் பின்பற்றும் ஒரு புனிதமான சமயத்தை உலகிற்கு எதிரியாகச் சித்தரிப்பது மிகவும் ஆபத்தானது, பொறுப்பற்ற செயலாகும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹசான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் என்பது கருணை, நீதி, அமைதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமயம் என்று சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய மோதல்களுக்குச் சமயச் சாயத்தைப் பூசுவது பிரிவினையைத் தூண்டும் ஒரு வீணான முயற்சி என்று குறிப்பிட்டார். 

ஒரு சில தீவிரவாதச் செயல்களை ஒட்டுமொத்த சமயத்தின் போதனையாகக் கருதுவது தவறானது என்றும், இத்தகைய தவறான கருத்துகள் 'இஸ்லாமோஃபோபியா' (Islamophobia) எனப்படும் இஸ்லாமிய வெறுப்புணர்வை வளர்க்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கமும் சர்வதேச சமூகமும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பொதுவெளியில் வெளியிடும் கருத்துகள் உண்மையான தகவல்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்றும், சமயங்களுக்கு இடையே பகைமையை வளர்க்கும் விதமாக இருக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset