நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் சொந்தக் கணக்கிற்குச் சென்ற 12 கோடி டாலர்: எஸ்.ஆர்.சி-க்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோலாலம்பூர்: 

எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் (SRC International) நிறுவனத்தில் முறைகேடு செய்ததற்காகவும், நம்பிக்கைத் துரோகம் புரிந்ததற்காகவும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், அந்நிறுவனத்திற்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தவிர, ஆண்டுக்கு ஐந்து விழுக்காடு வட்டி, இதர நீதிமன்றச் செலவுகளையும் அவர் ஏற்க வேண்டும் என்று நீதிபதி டத்தோ அஹம்மத் ஃபைரூஸ் ஜைனோல் ஆபிடின் தீர்ப்பளித்தார்.

சுமார் நான்கு மணி நேரம் வாசிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பில், நஜிப் ரசாக் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எஸ்.ஆர்.சி நிறுவனத்தை, ‘1 எம்.டி.பி-யிடமிருந்து’ (MDB) நிதி அமைச்சின் கீழ் கொண்டு வந்ததும், அதன் மூலம் நிறுவனத்தின் நிதியைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, முதலீட்டு நோக்கம் ஏதுமின்றி தொடங்கப்பட்ட கிளை நிறுவனங்கள் வழியாக, நஜிப்பின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு 120 மில்லியன் அமெரிக்க டாலர் மாற்றப்பட்டிருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

நஜிப்பின் இந்தச் செயல்கள் வெறும் கவனக்குறைவோ அல்லது தவறான முடிவோ அல்ல, மாறாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு மோசடி என்று நீதிபதி தனது தீர்ப்பில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இந்த இழப்பீட்டுப் பொறுப்பை நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் மீது சுமத்த நஜிப் தரப்பு மேற்கொண்ட முயற்சியையும் நீதிமன்றம் நிராகரித்தது. எஸ்.ஆர்.சி நிறுவனத்தின் ஆலோசகராக இருந்த நஜிப்பிற்கே அனைத்து முடிவுகளிலும் முழு அதிகாரம் இருந்ததால், அவரே இந்த இழப்பீட்டிற்கு முழுப் பொறுப்பாவார்.

தற்போது 72 வயதாகும் நஜிப் ரசாக், ஏற்கனவே எஸ்.ஆர்.சி நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடு செய்த வழக்கில் தண்டனை பெற்று 2022 ஆகஸ்ட் முதல் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தச் சிவில் வழக்கின் தீர்ப்பு அவருக்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset