நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாற்றுத்திறனாளிப் பெண்ணைச் சீரழித்த எச்.ஐ.வி நோயாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடித் தீர்ப்பு

ஜொகூர் பாரு: 

கடந்த ஜனவரியில் ஒரு மாற்றுத்திறனாளி (OKU) பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக எச்.ஐ.வி., லுகேமியா நோயாளி ஒருவருக்கு இன்று இங்கு நடந்த நீதிமன்ற விசாரணையில் 10 ஆண்டு சிறை தண்டனை, 5 பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி மாடிஹா ஜைனோல், பாதுகாப்பு அலுவலராகவும் பணிபுரியும் குற்றவாளியான ஆர். சிவனேசன் (39), நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் குற்றச்சாட்டை வாசித்தவுடன் உடனடியாக குற்றமிழைத்ததாக ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.

கடந்த ஜனவரி 30 அன்று இரவு சுமார் 11.50 மணிக்கு தாமான் ஜெயா மாஸ், ஸ்குடாய் பகுதியில் ஜாலான் ஜெயா மாஸ் 9-க்கு அருகிலுள்ள ஒரு வீட்டில், கேட்கும், பேசும், கற்றல் திறன் குறைபாடுகள் கொண்ட 29 வயது பெண்ணை, அவளுக்கு உடல் ஊனம் இருப்பதை தெரிந்தும், அந்த ஆண் பலாத்காரம் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கை துணை தலைமை அரசு வழக்குரைஞர் நோர் ஃபாடில்லா ஜோஹானுதீன் நடத்தினார். குற்றவாளிக்கு ஆதரவாக வழக்குரைஞர் ஒமர் குட்டி அப்துல் அஜிஸ்  வழக்காடினார்.

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு, குற்றவாளி தன் செயலுக்கு மன்னிப்பு கோரி வருந்துவதாக ஒமர் குட்டி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

"குற்றவாளி மாதம் RM2,200 சம்பளத்திற்குப் பாதுகாப்பு அலுவலராக பணிபுரிகிறார். அவருக்கு எச்.ஐ.வி., லுகேமியா அல்லது இரத்த புற்றுநோய் உள்ளது.

"சுகாதார பிரச்சினைகளால் குற்றவாளி சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல வேண்டியிருக்கிறது. குற்றவாளி கோவிலில் பல அறப்பணிகள் செய்துள்ளார், முந்தைய குற்றப் பதிவுகள் ஏதும் இல்லை" என்று அவர் கூறினார்.

நோர் ஃபாடில்லா, குற்றவாளியின் நலனை விட, OKU அட்டை வைத்திருக்கும் பாதிக்கப்பட்டவரின் பொது நலனை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்படி வேண்டினார்.

"குற்றவாளி பேசும், கேட்கும் , கற்றல் திறன் குறைபாடுகள் கொண்ட பாதிக்கப்பட்டவரின் உடல் ஊனத்தை பயன்படுத்திக்கொண்டார்.

"குற்றவாளிக்கு எச்.ஐ.வி. நோய் இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்த வாதத்தின் அடிப்படையில், குற்றவாளியின் செயல் பாதிக்கப்பட்டவரைப் பால்வினை நோய் தொற்றும் அபாயத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

"முன்மாதிரியாக அமையும் தகுந்த தண்டனை விதிக்கப்படும்படி கோருகிறோம், மேலும் குற்றவாளிக்கு போலிஸ் கண்காணிப்பு, மீட்பு ஆலோசனை வழங்குமாறு கோருகிறோம்" என்று அவர் கூறினார்.

நீதிமன்றம் சிறை தண்டனை  பிரம்படி தண்டனையை விதித்ததோடு, சிறை தண்டனை காலம் முழுவதும் மீட்பு ஆலோசனை பெறவும், சிறை தண்டனை முடிந்த பிறகு ஒரு ஆண்டு காலம் போலி ஸ் கண்காணிப்பில் இருக்கவும் உத்தரவிட்டது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset