நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் 13-வது திட்டத்தில் அணுசக்தி

பெட்டாலிங் ஜெயா: 

மத்திய கிழக்கு மோதலால் எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டிருப்பது, மலேசியா அணு சக்தியின் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது என்று துணை பிரதமர் ஃபாடில்லா யூசுஃப் கூறினார்.

அணு சக்தி மின் உற்பத்திக்கு நிலையான, குறைந்த கார்பன் அடிப்படை சுமையை வழங்கி, நாட்டின் புதைபடிவ எரிபொருள் சார்பைக் குறைக்கும் என்று ஃபாடில்லா தெரிவித்தார்.

எரிசக்தி மாற்றம், நீர் மாற்றமைப்பு அமைச்சரான அவர், கடந்த ஆண்டு ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட 13-வது மலேசியா திட்டம் நீண்டகால எரிசக்தி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த அணு சக்தி பயன்பாட்டை ஆராயும் முன்முயற்சிகளை வகுத்திருப்பதையும் குறிப்பிட்டார்.

"புவிசார் அரசியலின் நிச்சயமற்ற தன்மை, எரிபொருள் விநியோகம், விலைகளில் நிலையற்ற தன்மையால் தாக்கமடையும் உலகளாவிய எரிசக்தி நிலப்பரப்பில் மாற்றங்களின் சூழலில் அணு சக்தியின் சாத்தியம், நடைமுறைத் தன்மையை மதிப்பீடு செய்வதன் அவசியம் இன்னும் பொருத்தமானதாகியுள்ளது" என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் 2050-ல் 4,800 மெகாவாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடுவதோடு, இந்தோனேசியா 2030-ல் சிறிய மட்டு வடிவமைப்பு உலைகளைப் பயன்படுத்துவதை ஆராய்வதால், பிராந்திய அண்டை நாடுகள் இந்தத்  திசையில் நகர்ந்துள்ளன என்றும் ஃபாடில்லா கூறினார்.

மலேசியாவில், மைபவர் கார்ப்பரேஷன் முகவர் அமைப்பு தேசிய அணு சக்தி திட்டத்திற்கு தேவையான கொள்கைகள், சட்ட கட்டமைப்புகள்  உள்ளூர் தொழில் பங்கேற்பு குறித்த முழுமையான ஆய்வை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"அணு சக்தி வளர்ச்சி குறித்த எந்தவொரு கருத்தும் மலேசியாவின் வளர்ச்சி முன்னுரிமைகள், சர்வதேச கடமைகளுக்கு இணங்க விரிவான தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் முழுமையாக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமை" என்று ஃபாடில்லா தெரிவித்தார்.

அணு எரிபொருள் மிகவும் திறமையான எரிசக்தி மூலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அமெரிக்க எரிசக்தி திணைக்களத்தின்படி, சுமார் ஒரு அங்குல உயரமுள்ள ஒரு யுரேனியம் துகள் 17,000 கன அடி இயற்கை எரிவாயு, 120 கேலன் எண்ணெய் அல்லது ஒரு டன் நிலக்கரியின் அளவிற்கு உருவாக்கும் தன்மை கொண்டதாகும்.

இரண்டு மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய 2,000 மெகாவாட் திறன் கொண்ட முழு அளவு ஆலை, தொழில் மையங்களுக்கான சிறிய மட்டு வடிவமைப்பு உலைகள், தீவுகளுக்கான மிதக்கும் அலகுகள் ஆகியவை மலேசியாவின் கருத்தில் கொள்ளும் விருப்பங்களில் அடங்கும்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset