நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டீசல் விலை உயர்வு: 5,000 பேருந்து தொழிலதிபர்கள் பாதிப்பு

சிரம்பான்: 

நாடு முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பேருந்து, தொழிலாளர் பேருந்து, சிறப்பு வாடகை (சாத்தார்) பேருந்து தொழிலதிபர்கள் அரசாங்கம் அறிவித்த டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுவார்கள்.

மலேசியா சாத்தார் பேருந்து சங்கத்தின் தலைவர் முஹம்மத் ரஃபிக் முஹம்மத் யூசுஃப், எரிபொருள் விலையில் திடீர் உயர்வைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களுக்கு டீசல் மானியம் வழங்குவதை அரசாங்கம் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

மலேசியா சுற்றுலா பேருந்து சங்கத்தின் செயல் தலைவராகவும் இருக்கும் அவர், நடவடிக்கை அல்லது உதவி எதுவும் வழங்கப்படாவிட்டால் பல தொழிலதிபர்கள் திவாலாகும் அபாயத்தை எதிர்கொள்வார்கள் என்பது நிச்சயமற்றதல்ல என்று கூறினார்.

"டீசல் விலை உயர்வு உலகம் முழுவதும் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் மிகவும் கவலையளிப்பது என்னவெனில் விலை தொடர்ந்து உயரலாம்.

"எனவே, இந்தத் தொழிலதிபர்கள் தொடர்ந்து நிலைத்திருந்து இயங்குவதற்கு வழி வகுக்க மானியம் வழங்குவதைக் கருத்தில் கொள்வது உட்பட சிறந்த தீர்வைக் கண்டறிய அரசாங்கத்தின் விவேகத்தை நாங்கள் நம்புகிறோம்" என்று இன்று தனது அலுவலகத்தில் சந்தித்த போது அவர் தெரிவித்தார்.

உலகளாவிய எண்ணெய் விலை சரிசெய்தலைத் தொடர்ந்து இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மலாய் தீபகற்பத்தில் டீசல் விலை லிட்டருக்கு 80 சென் உயர்ந்து RM5.52 ஆனது என்று அவர் விளக்கினார்.

இந்த உயர்வு போக்குவரத்து, தளவாட செலவுகள், அன்றாட பொருட்களின் விலைகளில் தொடர் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் சுற்றுலா பேருந்து தொழிலதிபர்களையும் பாதிக்கிறது.

மேலும் விளக்கமளித்த முஹம்மத் ரோஃபிக், தொழிலதிபர்கள் தற்போதைய டீசல் விலைக்கேற்ப வாடகையை உயர்த்தலாம் என்றாலும், கடந்த டிசம்பர் முதல் பெறப்பட்ட பதிவுகளை வாடிக்கையாளர்கள் ரத்து செய்துவிடுவார்களோ என்ற கவலை இருப்பதாக கூறினார்.

இந்த நிலைமை தொழிலதிபர்களுக்கு ஒரு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்துவதாக அவர் கூறினார், ஏனெனில் தற்போதைய செலவுகள் அதிகரித்தாலும் பழைய கட்டணத்திலேயே தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

"எடுத்துக்காட்டாக, முன்பு ஒரு பயணத்திற்கு சுமார் RM2,000 வசூலித்திருந்தால், டீசல் செலவு உயர்வின் காரணமாக திடீரென RM3,000 ஆக உயர்த்துவது சாத்தியமில்லை.

"சில பதிவுகள் வாடிக்கையாளர்களால் ரத்து செய்யப்பட்டதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசல் உயர்வு தொடர்ந்தால் எங்களுக்கு என்ன கதி என்று கற்பனை செய்து பாருங்கள்" என்று அவர் கூறினார்.

மாற்று உதிரிபாகங்கள், வாகன டயர்கள் போன்ற மற்ற செலவுகளும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டீசல் விலை உயர்வு இரட்டிப்பு தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் முஹம்மத் ரோஃபிக் தெரிவித்தார்.

உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு பிரச்சினையைச் சமாளிப்பதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களைத் தாங்கள் புரிந்துகொள்வதாகவும், ஆனால் தொழிலின் தொடர்ச்சிக்காக "இரு தரப்பும் வெல்லும்" தீர்வை அடைய முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

"நாட்டின் சுற்றுலா சூழல் அமைப்பில் சுற்றுலா பேருந்துகள், சாத்தார் பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து துறையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று நம்புகிறோம், ஏனெனில் அதன் பங்கு மிகவும் முக்கியமானது.

"தொழிலதிபர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க உறுதிப்படுத்துவதற்காக சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சருக்கு நினைவுப் பத்திரம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset