நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஏப்ரலில் தொடங்கும் இயற்கைச் சீற்றம்: தட்டுப்பாடின்றி உணவு வழங்க இந்தோனேசிய அரசு திட்டம்

ஜகார்த்தா:

வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தோனேசியாவில் 'காட்ஸில்லா' (Godzilla) எனப்படும் மிகக் கடுமையான 'எல் நினோ' காலநிலை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் ஏற்படக்கூடிய நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளவும், உணவுப் பொருட்களின் விலையை நிலைப்படுத்தவும் இந்தோனேசிய அரசு தனது தேசிய உணவு கையிருப்பை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தேசிய உணவு முகமை, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் போதிய அளவில் சேமிக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக, நாட்டின் பிரதான உணவுத் தேவையான அரிசி கையிருப்பு கடந்த ஆண்டை விட 77.8 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 25-ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 40.8 லட்சம் டன் அரிசி கையிருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தவிர சோளம், சமையல் எண்ணெய், சர்க்கரை, இறைச்சி, முட்டை போன்ற பொருட்களின் இருப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு உற்பத்தியை முன்னிறுத்தி இந்தச் சேகரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை மாற்றத்தினால் இந்த எல் நினோ தாக்கம் வழக்கத்தை விட அதிக வெப்பமாகவும், உலர்ந்ததாகவும் இருக்கும் என அந்நாட்டின் தேசிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முகமை எச்சரித்துள்ளது. 

இதனால் ஏற்படக்கூடிய சவால்களைச் சமாளிக்க, தேவைப்படும் நேரங்களில் மக்களுக்கு உடனடியாக உணவுப் பொருட்களை விநியோகிக்கத் தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இயற்கைச் சீற்றத்தினால் பொதுமக்களின் வாழ்வாதாரமும், உணவுத் தேவையும் பாதிக்கப்படக்கூடாது என்பதே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் சந்தையில் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாடற்ற விநியோகத்தை உறுதி செய்யவும் இந்தோனேசிய அரசு உறுதிபூண்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset