நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போரினால் சிதைந்த ஆன்மீகச் சின்னம்: அழியும் நிலையில் 'பிரே விஹியர்' வரலாற்றுத் தலம்

புனோம் பென்: 

கம்போடியா, தாய்லாந்து நாடுகளுக்கு இடையே நிலவி வரும் எல்லைப் போர் காரணமாக, 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'பிரே விஹியர்' (Preah Vihear) சிவன் கோயில் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது. 

கெமர் பேரரசால் கட்டப்பட்டு, யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இந்தக் கோயில், தற்போது பீரங்கிக் குண்டுகள், துப்பாக்கிச் சூடுகளால் சிதைந்து, பொலிவிழந்து காணப்படுகிறது.

குறிப்பாக, கோயிலின் ஐந்து நுழைவாயில் மண்டபங்களும் சேதமடைந்துள்ளதோடு, அவற்றில் மூன்று அடையாளம் காண முடியாத அளவிற்குச் சிதைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1950-களிலிருந்து நீடித்து வரும் இந்த எல்லைத் தகராறில், சர்வதேச நீதிமன்றம் இந்தக் கோயில் கம்போடியாவுக்கே சொந்தம் எனத் தீர்ப்பளித்திருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் அழுத்தங்கள் அவ்வப்போது ஆயுத மோதல்களாக வெடிக்கின்றன. 

தாய்லாந்து ராணுவம் வேண்டுமென்றே இந்தக் கலைக் கூடத்தைத் தாக்கியதாகக் கம்போடியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், கம்போடிய ராணுவம் கோயிலைப் போர் அரணாகப் பயன்படுத்தியதால் மட்டுமே தாங்கள் பதிலடி கொடுத்ததாகத் தாய்லாந்து தரப்பு வாதிடுகிறது.

தற்போது நிலவும் பாதுகாப்பு அற்ற சூழலால், சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் நிறுத்தப்பட்டு, கோயில் மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்புப் பணிகளும் தற்போது முடங்கியுள்ளன. பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பலவீனமடைந்துள்ள கோயிலின் பகுதிகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதால், உடனடியாகப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே இப்புனிதத் தலத்தை மீட்டெடுக்க முடியும் என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset