நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'ஹர்ராஸ் கும்பல்' அதிரடியாகக் கைது: திருடுபோன பல வாகனங்களை மீட்டது மலாக்கா போலிஸ்

மலாக்கா: 

மலாக்காவில் மோட்டார் சைக்கிள் திருட்டு, வீடு புகுந்து கொள்ளையடித்தல், போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 'ஹர்ராஸ் கும்பல்' (Geng Harraz), காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையில் முறியடிக்கப்பட்டுள்ளது. 

24 முதல் 32 வயதுடைய நான்கு ஆண்களைக் கொண்ட இந்தக் கும்பலை, கடந்த மார்ச் 19-ஆம் தேதி அலாய், பெமாதாங் பாசிர் பகுதியில் மலாக்கா மாவட்டக் காவல்துறையினர் கைது செய்தனர். இக்கும்பலின் தலைவன் மீது மட்டும் ஏற்கனவே 20 குற்றப் பின்னணிகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில் கிடைத்துள்ள திடுக்கிடும் தகவலின்படி, இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சிறையில் இருந்தபோது ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலையான பிறகு இப்புதிய கொள்ளைக் கும்பலை உருவாக்கியுள்ளனர். 

மலாக்கா தெங்கா, ஜாசின் பகுதிகளில் 'மாஸ்டர்' சாவிகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களைத் திருடுவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு திருடப்படும் வாகனங்களின் பாகங்களைப் பிரித்து, அவற்றை இணையம் வாயிலாகவும் நேரடியாகவும் விற்பனை செய்து வந்துள்ளனர்.

சுமார் 12 குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர்களிடமிருந்து, 6 மோட்டார் சைக்கிள்கள், ஒரு வேன், திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் என மொத்தம்  RM50,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட நால்வரும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களிடமிருந்து பொருட்களை வாங்கியவர்கள், இவர்களுக்குத் துணையாகச் செயல்பட்ட மற்ற நபர்களைக் கண்டறியக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset