நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரும்ப விரும்பும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் குறித்து UMNO செயற்குழு முடிவு செய்யும்

கோலாலம்பூர்: 

அம்னோவிற்கு திரும்ப விரும்பும் முன்னாள் தலைவர்கள், சில அரசியல் நபர்களின் விண்ணப்பங்கலையும் மேல்முறையீடுகளையும் அம்னோ உயர்நிலை செயற்குழு (MKT) முடிவு செய்யும்.

அம்னோ முன்னர் நிறுவிய ரூமா பங்சா ஒருங்கிணைப்பு குழுவால் விண்ணப்பங்களும் மேல்முறையீடுகளும் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ரூமா பங்சா ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் டத்தோ ஒத்மான் தேசா, குழு இந்த மாதம் தொடக்கத்தில் முதல் கூட்டத்தை நடத்தி, பெற்ற ஒவ்வொரு விண்ணப்பத்தையும் மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கலையும் நிபந்தனைகளையும் நிர்ணயித்ததாக கூறினார்.

"ஒவ்வொரு விண்ணப்பம், மேல்முறையீட்டையும் மதிப்பீடு செய்ய இந்த ஹரிராயா ஐதில்ஃபித்ரிக்கு பிறகு இரண்டாவது கூட்டம் நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். விண்ணப்பங்களின் எண்ணிக்கை எனக்கு சரியாக தெரியவில்லை, ஆனால் முன்னாள் தலைவர்கள், சில குறிப்பிட்ட நபர்களிடமிருந்தும் (விண்ணப்பங்கள், மேல்முறையீடுகள்) வரத்தொடங்கிவிட்டன.

"சில வழக்குகளில் ஒழுங்காற்று வாரியம், MKT-ன் அதிகார வரம்பும் சம்பந்தப்படுவதால், குழு ஒவ்வொரு வழக்கையும் தீவிரமாக ஆய்வு செய்யும். சில வழக்குகளைக் குழுவே முடிவு செய்யலாம், சில கடுமையான தவறுகளாக கருதப்படலாம், அதனால் (மேல்முறையீடு) MKT கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" என்று இன்று தொடர்புகொண்ட போது அவர் தெரிவித்தார்.

பெறப்பட்ட ஒவ்வொரு மேல்முறையீட்டையும் விண்ணப்பத்தையும் நிராகரிக்க வேண்டுமா அல்லது ஏற்க வேண்டுமா என்பது குறித்து அம்னோ MKT-க்கு பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் சமர்பிக்கும், ஆனால் இறுதி முடிவு MKT-யால் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 ஒழுங்காற்று நடவடிக்கைகள், அதாவது பதவி நீக்கம் அல்லது உறுப்பினர் நிலை இடைநீக்கம் எதுவும் செய்யப்படாமல் அம்னோவிலிருந்து வெளியேறிய அல்லது விலகிய உறுப்பினர்கள், தலைவர்களின் மேல்முறையீடுகளைக் குழு நிலையிலேயே முடிவு செய்யலாம்.

எனினும், கட்சி ஒழுக்கத்தை மீறியதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது கடுமையான தவறுகள் செய்தவர்களாக கருதப்படும் முன்னாள் உறுப்பினர்கள் அல்லது தலைவர்களின் மேல்முறையீடு, விண்ணப்ப நிலை அம்னோ MKT-க்கு முடிவுக்காக பரிந்துரைக்கப்படும்.

 அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹாமிடி எந்தவொரு நபரும் தலைவர்களும் அம்னோவிற்குத் திரும்புவதற்கான வாயிலை முழுமையாக திறந்திருப்பதாக தெரிவித்தது முதல், குழு பெற்ற விண்ணப்பங்கள், மேல்முறையீடுகளின் அளவு மிகவும் உற்சாகமளிப்பதாக உள்ளது என்று முன்னால் அம்னோ தலைவரும் கட்சி MKT உறுப்பினருமான ஒத்மான் ஒப்புக்கொண்டார்.

"சிலர் விண்ணப்பங்கள், மேல்முறையீடுகளைச் சமர்பிக்க நேரடியாக தலைவரைச்  சந்தித்தனர். முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்களிடமிருந்து வரவேற்பு மிகவும் நேர்மறையாக இருப்பதை நான் காண்கிறேன்" என்று அவர் கூறினார்.

முன்னாள் அம்னோ துணை தலைவர் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுதீன் ஹுசைன், முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீன் ஆகியோர் திரும்ப மேல்முறையீடு செய்ததோடு, முன்னாள் அம்னோ ஜெம்போல் பிரிவு தலைவர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் சலிம் முஹம்மத் ஷரிஃப், முன்னாள் அம்னோ தெப்ராவ் பிரிவு தலைவர் டத்தோ மவுலிஜான் புஜாங் ஆகியோரும் இதற்கு முன்பே இதுபோல் செய்துள்ளனர்.

முன்னர் பெர்சத்துவிலிருந்து விலகிய முன்னாள் சிலாங்கூர் அம்னோ தலைவர் டான் ஸ்ரீ நோ உமர், அம்னோ முதலில் ஒற்றுமை அரசாங்கத்தில் DAP-உடன் கூட்டுறவை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

2023-ல் உறுப்பினர் நிலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அம்னோ தகவல் தலைவர் ஷாரில் ஹம்டான், தாம் கட்சிக்கு திரும்ப சரியான தருணம் வரவில்லை என்றும், தற்போது அரசியலுக்கு வெளியே இருப்பதில் மிகவும் நிம்மதியாக இருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையே, முன்னாள் மலாக்கா முதலமைச்சர் டான் ஸ்ரீ அப்துல் ரஹீம் தாம்பி சிக், சமீபத்தில் பெர்சத்துவிலிருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் MKT உறுப்பினர் டான் ஸ்ரீ டாக்டர் ராயிஸ் யாத்திம் ஆகியோர் திரும்பலாம் என்று கருதப்படும் நபர்களில் அடங்குவதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த ஜனவரியில் நடைபெற்ற அம்னோ பொதுச் சபையில் (PAU), முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்கள் கட்சிக்கு திரும்புவதற்கான வழியாக ரூமா பங்சா நிறுவுவதற்கும், எதிர்கட்சி தொகுதி உட்பட அனைத்து முக்கிய மலாய், இஸ்லாமிய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியான கொலாபொராசி அகோங் என்ற திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset