நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள் கால சிறப்பு சோதனை: சட்டவிரோத வாகன ஓட்டுநர்கள் கைது

ஜொகூர் பாரு: 

கோலாலம்பூரிலிருந்து ஜொகூர் பாருவிற்கு சட்டவிரோத வாடகை வாகன சேவையில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

ஸ்குடாய் சுங்கச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட 'ஹரிராயா 2026' சிறப்புச் சோதனையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிபட்ட நபர், ஒரு பயணியிடம் தலா 80 ரிங்கிட் கட்டணம் வசூலித்து, தனது தனியார் வாகனத்தில் 8 வெளிநாட்டினரை ஏற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிடிபட்ட வாகனத்தில் நான்கு பாகிஸ்தானியர்கள், ஓராண்டு காலக் குழந்தை உட்பட நான்கு ரோஹிங்கியா அகதிகள் பயணம் செய்துள்ளனர். தனியார் வாகனத்தைப் பொதுப் போக்குவரத்துச் சேவைக்குப் பயன்படுத்தியதன் மூலம், 2010-ஆம் ஆண்டு நிலப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இந்தச் சோதனையின் போது தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமையுடன் இணைந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், உயர்கல்வி நிறுவன மாணவர் ஒருவர் உட்பட ஐந்து பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜொகூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஜுல்கர்னைன் யாசின் இது குறித்துக் கூறுகையில், மாநிலம் முழுவதும் விபத்துகள் அதிகம் நிகழக்கூடிய 33 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இந்தப் பெருநாள் காலத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்ட மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset