நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டீசல் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி: சபா, சரவாக்கில் மானிய முறையை மாற்றியமைக்க மலேசிய அரசு தீவிரம்

புத்ராஜயா: 

டீசல் மானிய விநியோக முறையை மறுபரிசீலனை செய்ய மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் தொடர்புத்துறை அமைச்சரும், மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார். 

தற்போதைய 'டீசல் மானியக் கட்டுப்பாட்டு முறை' (SKDS) போதுமானதாக உள்ளதா அல்லது அதற்குப் பதிலாக மிகவும் பயனுள்ள புதிய முறையை அறிமுகப்படுத்த வேண்டுமா என்பது குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

டீசல் விநியோகத்தில் நிலவும் முறைகேடுகள், சட்டவிரோத விற்பனையைத் தடுப்பதற்காக, அமலாக்கத்துறையினரின் பணிப் பொறுப்புகள் தற்போது முறைப்படுத்தப்பட்டுள்ளன. 

இதன்படி, தரைவழிப் பகுதிகளில் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சும், கடல், ஆற்றுப் பகுதிகளில் மலேசிய கடல்சார் அமலாக்க முகமையும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடும். எல்லைப் பகுதிகளில் நிலவும் கசிவுகளைத் தடுக்க அந்தந்தப் பகுதி சார்ந்த பாதுகாப்பு அமைப்புகளுக்குப் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

டீசல் மானியம் உண்மையில் தேவைப்படுபவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருளைக் கடத்தல் கும்பல்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஏற்படும் பெரும் பொருளாதார இழப்பைத் தவிர்க்க இத்தகைய மாற்றங்கள் அவசியமாகின்றன. 

இது தொடர்பான புதிய பரிந்துரைகள், விநியோக முறைகளை உருவாக்குவதில் நிபுணர் குழுக்கள் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம், டீசல் முறைகேடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்புகிறது. வரும் காலங்களில், கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நாட்டின் வளங்கள் சுரண்டப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset