நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“மஸ்ஜித் அல்-அக்ஸா பள்ளிவாசலின் வாயில்களை உடனே திறக்க வேண்டும்”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடும் எச்சரிக்கை

கோலாலம்பூர்: 

ஜெருசலேமில் உள்ள புனித மஸ்ஜித் அல்-அக்ஸா பள்ளிவாசலின் வாயில்களை இஸ்ரேல் உடனடியாகத் திறக்க வேண்டும் என மலேசியா வலியுறுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், செல்வாக்கு மிக்க நாடுகள் வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், ஈகைத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாடுகளைச் சுதந்திரமாக முன்னெடுப்பதை உறுதி செய்யத் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

புனித ரமலான் மாதத்தின் இறுதி நாட்களிலும், ஈகைத் திருநாள் நெருங்கும் வேளையிலும் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதத் தலமான அல்-அக்ஸாவிற்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது எனப் பிரதமர் சாடினார். 

இஸ்ரேலின் இந்த அத்துமீறல் சர்வதேச சட்டங்களுக்கும், மனித கண்ணியத்திற்கும் எதிரானது மட்டுமல்லாமல், சட்ட விரோதமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய நடவடிக்கைகள் இஸ்ரேலின் தண்டனையற்ற போக்கையே பிரதிபலிக்கிறது என்று அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய இக்கட்டான சூழலில் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் பாலஸ்தீன மக்களுடன் மலேசியர்கள் எப்போதும் துணை நிற்பார்கள் எனப் பிரதமர் உறுதியளித்தார். பாலஸ்தீனர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, சகிப்புத்தன்மையைக் கண்டு உலகம் வியப்பதாகவும், அவர்கள் இப்போராட்டத்தில் தனித்து விடப்படவில்லை என்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

மலேசியா தொடர்ந்து பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் சர்வதேச அரங்கில் ஓங்கி குரல் கொடுக்கும் என்றும், தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் முன்னெடுக்கும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset