நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“மலேசிய உள்நாட்டுச் சுற்றுலாவில் அதிரடி வளர்ச்சி”: புள்ளிவிவரத் துறை அதிகாரி உசிர் மஹிதின்

பெட்டாலிங் ஜெயா:

மலேசியாவின் உள்நாட்டுச் சுற்றுலாத் துறை 2025-ஆம் ஆண்டில் 121 பில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்டி புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 106.7 பில்லியன் ரிங்கிட் வருமானத்துடன் ஒப்பிடுகையில், சுமார் 14.3 பில்லியன் ரிங்கிட் கூடுதலாகும் என்று புள்ளிவிவரத் துறைத் தலைமை அதிகாரி உசிர் மஹிதின் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2025-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் மட்டும் வருவாய் 12.4 விழுக்காடு உயர்ந்து 32.6 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகியுள்ளது.

பள்ளிக்கூட விடுமுறை, பண்டிகைக் காலங்களில் மலேசியர்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டதே இந்த அபார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். இதன் பயனாக தங்குமிடங்கள், உணவு, பானங்கள், போக்குவரத்து, சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த அனைத்துத் துறைகளிலும் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

2025-ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11.5 விழுக்காடு உயர்ந்து 29 கோடியாக அதிகரித்துள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறையிலும் உள்நாட்டுப் பயணிகளின் வருகை 17.9 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தங்குமிடத் துறையானது நான்காம் காலாண்டில் 14.7 விழுக்காடு வருவாய் வளர்ச்சியைப் பெற்றுள்ளதுடன், அனைத்து ரக விடுதிகளிலும் தங்கும் இடங்களின் பயன்பாடு சீராக உயர்ந்துள்ளது. மேலும், எரிபொருள் விற்பனையும் 7.1 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.

ஒட்டுமொத்தமாக, அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை, சுற்றுலாச் செலவினங்கள் மலேசியப் பொருளாதாரத்தின் ஊந்துகோலாக விளங்குவதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதில் உள்நாட்டுச் சுற்றுலாத் துறை மிக முக்கியப் பங்காற்றி வருவதாக உசிர் மஹிதின் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset