நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனநல பாதிப்பால் நேர்ந்த விபரீதம்: மலேசியப் பெண் காவலரைத் தாக்கிய வெளிநாட்டுப் பெண் கைது

ஜார்ஜ்டவுன்:

பினாங்கிற்குச் சுற்றுலா வந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 34 வயது பெண்மணி, பெண் காவலர் ஒருவரைத் தாக்கிய குற்றத்திற்காக ஜார்ஜ்டவுன் குற்றவியல் நீதிமன்றத்தால் 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி, ஈசாண் மாவட்டத்திலுள்ள ஒரு தேநீர் விடுதியில் பணியிலிருந்த லான்ஸ் கார்போரல் நூர்ஃபர்ஹானா முகமது ஜோஹ்தி என்பவரின் வயிற்றில் உதைத்து, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக சிலேவ்ஸ்கி தெரசா என்ற அந்தப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நீதிமன்ற விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது தவறை ஒப்புக்கொண்டார். அவரது வழக்கறிஞர் வாதிடுகையில், தெரசா 16 வயது முதல் 'ஸ்கிசோஃப்ரினியா' (Schizophrenia) எனும் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கமாக உட்கொள்ள வேண்டிய மருந்துகளைத் தவறவிட்டதே அவரது இந்த வன்முறைச் செயலுக்குக் காரணம் என்றும் தெரிவித்தார். 

தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தனது செயலுக்கு வருந்திப் பாதிக்கப்பட்ட காவலரிடம் மன்னிப்பு கோருவதாகவும் வழக்கறிஞர் முறையிட்டார்.

தெரசாவின் தந்தை, சகோதரி முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், அவரது மனநலத்தைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சத் தண்டனை வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. 

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மூன்று மாதச் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

இறுதியில், நீதிமன்றம் விதித்த 3,000 ரிங்கிட் அபராதத் தொகையை அந்தப் பெண் உடனடியாகச் செலுத்தினார். ஒரு சுற்றுலாப் பயணியின் கட்டுப்பாடற்ற செயலால் பினாங்கில் ஏற்பட்ட இந்தச் சலசலப்பு, சட்ட ரீதியான நடவடிக்கையுடன் முடிவுக்கு வந்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset