நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர் பாதுகாப்புப் புறக்கணிப்பு: பினாங்கு தொழிற்சாலைகளுக்கு 70,000 ரிங்கிட் அபராதம்

பாலிக் புலாவ்:

பினாங்கு, பயான் லெப்பாஸ் பகுதியில் உள்ள இரண்டு உற்பத்தி நிறுவனங்கள், பணியிடத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக பாலிக் புலாவ் செஷன்ஸ் நீதிமன்றத்தால் மொத்தம் 70,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. 

1994-ஆம் ஆண்டு தொழில் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின் (சட்டம் 514) கீழ் தொடரப்பட்ட இந்த வழக்குகளில், இரண்டு நிறுவனங்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிபதி அஹ்சல் ஃபரிஸ் அஹமத் கைருதீன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

முதல் வழக்கில், ஒரு நிறுவனம் தனது ‘Reach Truck’ பக்கவாட்டு கண்ணாடி, எச்சரிக்கை ஒலிப்பான்கள், மின்விளக்கு போன்ற அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்தத் தவறியுள்ளது. 

இதன் விளைவாக ஏற்பட்ட விபத்தில் அங்கிருந்த நபர் ஒருவர் நிரந்தரமாக ஊனமடைந்ததை அடுத்து, அந்த நிறுவனத்திற்கு 35,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியது இந்நிறுவனத்தின் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும்.

மற்றொரு வழக்கில், ‘Manual Overhead Travelling Crane’ இயக்குவதற்கான முறையான பாதுகாப்பு வழிமுறைகளை வழங்காத காரணத்திற்காக மற்றுமொரு நிறுவனத்திற்கு 35,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 

இந்த விதிமீறலால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளிநாட்டுத் தொழிலாளர் ஒருவர் விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்தது. தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பைப் பேணத் தவறியது அந்நிறுவனத்தின் மீதான மிகப்பெரிய குறைபாடாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

தொழில் பாதுகாப்பு, சுகாதாரத் துறையின் கடுமையான சட்டங்களின்படி, இத்தகைய பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 500,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பணியிடங்களில் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமை என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset