நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்திலிருந்து போலி துப்பாக்கிகள் கடத்தல்: பொறியாளர் உட்பட இருவர் மலேசிய எல்லையில் கைது

ஜித்ரா:

தாய்லாந்திலிருந்து மலேசியாவிற்குள் சட்டவிரோதமாகப் போலி துப்பாக்கிகளைக் கடத்தி வர முயன்ற 27 வயது மதிக்கத்தக்கத் தொழிற்சாலை பொறியாளர், அவரது நண்பரான 21 வயது விநியோக ஊழியர் ஆகிய இருவரைப் போலிசார் கைது செய்துள்ளனர். 

கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியளவில், புக்கிட் காயூ ஈத்தாம் எல்லைச் சோதனைச் சாவடியில் அவர்கள் பயணித்த வாகனத்தைச் சோதனையிட்டபோது இக்கடத்தல் வெளிச்சத்திற்கு வந்தது.

அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் இருக்கைகளுக்கு அடியிலும், பின்புறப் பெட்டியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த எட்டுப் போலி கைத்துப்பாக்கிகள், இரண்டு போலி நீள துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் ஏராளமான உலோகக் குண்டுகள், எரிவாயு உருளைகளைப் போலிசார் பறிமுதல் செய்தனர். 

இந்த ஆயுதங்களின் மொத்த மதிப்பு சுமார் 6,500 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக இவற்றை வாங்கிய பொறியாளர், பின்னர் டெலிகிராம் செயலி வாயிலாகக் கிடைத்த வாடிக்கையாளர்களுக்காக இக்கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் ஹட்யாய் பகுதியில் இந்த ஆயுதங்களைக் கொள்முதல் செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

1960-ஆம் ஆண்டின் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 36-ன் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்படுகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களிடம் மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமூக வலைத்தளங்கள் வாயிலாக இது போன்ற சட்டவிரோத வணிகங்களில் ஈடுபடுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனப் பொதுமக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset